விஜயகாந்துக்காக தயார் செய்யப்பட்ட சந்தனப்பேழையின் விலை எவ்வளவு தெரியுமா? இரவோடு இரவாக நடந்த வேலை!
சென்னை: விஜயகாந்தின் உடலை வைத்து நல்லடக்கம் செய்வதற்காக தயாரிக்கப்பட்ட சந்தனப் பேழையின் மதிப்பு ரூ.1.25 லட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி காலை 6.10 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது உடலை எப்போது, எங்கே அடக்கம் செய்வது என்ற ஆலோசனை விஜயகாந்த் குடும்பத்தினர் மத்தியில் நடந்துள்ளது. அதேபோல் கருணாநிதி, ஜெயலலிதா போல் விஜயகாந்தையும் சந்தனப்பேழையில் வைத்து கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே அடக்கம் செய்வது என குடும்பத்தினர் சிறிது நேரத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள்.

இதையடுத்து அண்ணா, எம்.ஜி.ஆருக்கு பேழைகள் செய்து கொடுத்த வின்செண்ட் பார்க்கர் ஃபனரல் சர்வீஸ் நிறுவனத்திடம் வியாழக்கிழமை 28ஆம் அன்று விஜயகாந்த் குடும்பத்திலிருந்து பேசப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை அதாவது 29ஆம் தேதி காலை 10 மணிக்குள் சந்தனப்பேழை தயார் செய்து கொடுக்க முடியுமா எனக் கேட்கப்பட்டுள்ளது. 10 மணிக்கு வாய்ப்பு குறைவு, வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு தயாராகிவிடும் என வின்செண்ட் பார்க்கர் ஃபனரல் சர்வீஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என எல்.கே. சுதீஷ் அறிவித்தார்.
இதனிடையே வின்செண்ட் பார்க்கர் ஃபனரல் சர்வீஸ் நிறுவனத்தில் வியாழக்கிழமை மாலை தொடங்கிய சந்தனப்பேழை தயாரிக்கும் வேலை, விஜயகாந்துக்காக ஓய்வின்றி இரவோடு இரவாக தொடரப்பட்டு வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கெல்லாம் வேலை முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் விஜயகாந்த் அடக்கம் செய்யப்படும் சந்தனப்பேழையில் என்னென்ன வாசகம் இடம் பெற வேண்டும் என்ற விவரத்தையும் அவரது குடும்பத்தினர் முன் கூட்டியே தெரியப்படுத்திவிட்டார்கள்.
தமிழில் பார்ப்பதற்கு தெளிவாக போல்டாக இருக்குமாறு சந்தனப்பேழையில் விஜயகாந்தின் பெயரும், கட்சிப் பதவியும், பிறந்த, இறந்த தேதியும் பொறிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது. இதனிடையே விஜயகாந்துக்கான இறுதிச்சடங்குகளை கண்ணியமான முறையில் ஏற்பாடு செய்திருந்தது அவரது குடும்பம் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications