கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை விடுங்க! புதிய ரயில் நிலையத்தின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான டெண்டரை தெற்கு ரயில்வே கோரியுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அன்று சில ஆயிரக்கணக்கில் மக்கள் பயணித்த நிலையில் இன்று நாள்தோறும் பல்லாயிரக்கணக்கில் பயணிக்கிறார்கள்.

அதிலும் பண்டிகை காலம் என்றால் லட்சங்களை தாண்டிவிடுகிறது. இதனால் தென் மாவட்ட பயணிகளை கருத்தில் கொண்டு தாம்பரத்தை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது கட்டி முடிக்கப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ளது. ஆனால் இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஏதும் இல்லை என அந்த சங்கத்தினர் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து இந்த பணிகள் முடிந்த பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரயில்வே துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்ற தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி ரூ 20 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் கட்டுவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த ரயில்நிலையத்தில் புறநகர் ரயில்களும் நின்று செல்ல வசதியாக 3 நடைமேடைகள் அமைக்கப்படும். இதன் கட்டுமான பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என தெரிகிறது.
இந்த ரயில்நிலையம் திறக்கப்பட்டால் எழும்பூரிலிருந்து கிளாம்பாக்கம் வரை மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இதனால் விடுமுறை காலங்களில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் வரை ரயிலில் சென்று பின்னர் அங்கிருந்து பேருந்துகளில் ஊருக்குச் செல்ல முடியும். இதனால் பண்டிகை, விடுமுறை நாட்களுக்கு முன்பும் பின்பும் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கலாம் என கருதப்படுகிறது.
இந்த ரயில் நிலையம் குறித்து தெற்கு ரயில்வே சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில் சென்னையின் பிரதான சாலையான ஜிஎஸ்டி சாலையில் வண்டலூர்- கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கம் உள்ளது. நகர் பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருவோர் பெரும்பாலும் சாலை வழியாகத்தான் பயணிக்க வேண்டும்.
இதனால் ஜிஎஸ்டி சாலையில் வழக்கத்தை விட மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். வண்டலூர் ரயில் நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ. தூரத்திலும் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து 1. கி.மீ. தூரத்திலும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. எனவே கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைந்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என தமிழக அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தது. எனவே தமிழக அரசின் பங்களிப்புடன் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது. வைப்புத் தொகையாக 40 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த பணிக்காக 20 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகள் முடிந்தால் எழும்பூரிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் 100 க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ரூ 400 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 1.5 லட்சம் பயணிகள் பயணிக்க முடியும். தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து விரைவு பேருந்துகளும் இங்கிருந்தே இயக்கப்படவுள்ளன. இந்த பேருந்து சேவையை போல் மின்சார ரயில் சேவையும் அவசியமானது.












Click it and Unblock the Notifications