வந்துடுச்சு வேண்டுகோள்.. குடும்பத்தோடு உட்கார்ந்து ராமஜெயம் மந்திரத்தை ஜெபிக்கணும்: யார்னு சொல்லுங்க
சென்னை: அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவையொட்டி அனைவரின் வீடுகளிலும் தீபம் ஏற்றிக் கொண்டாடுவோம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.. குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்யும் முக்கிய பூஜை இன்று பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, முறைப்படி கோயிலை திறந்து வைக்கிறார்.

இன்றைய தினம், ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் ராம ஜோதி ஏற்ற வேண்டும் என்றும், அன்றைய தினத்தை தீபாவளியைப் போல கொண்டாட வேண்டும் என்றும் பிரதமர் மோடி ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆளுநர் ரவி: இதுபோலவே, தமிழக ஆளுநரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. ராஜ்பவன் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "இந்த வரலாற்றுப் பொன்னாளை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். தமிழகத்தில் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளை கொண்டாடி வழிபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவையொட்டி அனைவரின் வீடுகளிலும் தீபம் ஏற்றிக் கொண்டாடுவோம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மடாதிபதிகள்: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா நிகழ்ச்சியையொட்டி, நாட்டு மக்கள்அனைவரும் குழந்தை ராமரை வரவேற்று தரிசிக்கத் தயாராகி வருகின்றனர். மடாதிபதிகளும் பல ஆன்மிக பெரியோர்களும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை வரவேற்றுள்ளனர்.
ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் தங்களது இல்லங்களில் கோலமிட வேண்டும். குடும்பத்துடன் அமர்ந்து ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.
கார்த்திகை தீபம்: 500 ஆண்டுக்கால இந்துக்களின் எழுச்சி போராட்டத்துக்குப் பிறகு இந்த தீர்வு கிடைத்துள்ளது. அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த ஆன்மிக எழுச்சி தினத்தை உள்ளுணர்வோடு ஒன்றுபட்டு அனைவர் வீடுகளிலும் மாலை கார்த்திகை தீபம்போல் அகல் விளக்குகளில் தீபமேற்றி ஒளி வெள்ளத்துடன், ராமரைப் போற்றி வணங்குவோம்" என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, பாரத மக்களின் கனவு நிறைவேறுகிறது என அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா தொடர்பாக தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆதீனம் வாழ்த்து: இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் சொன்னபோது, "பிரதமர் மோடி பல்வேறு தலங்களில் வழிபாடு செய்து, விரதம் இருந்து, அதன் மூலமாக இப்பணியை செய்கிறார். பெரிய தவத்தின் காரணமாக கிடைக்கின்ற செயல் இது. இதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் அங்கே கூடியிருக்கிறார்கள். பாரதத்தின் தன்மையை உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றன. அதனால், உலகெங்கிலும் இருந்து பாரதத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
அயோத்தி மாநகரம் மிகப்பெரும் நிகழ்வை காண்கிறது. உலகம் எங்கும் பிரதமர் மோடியின் இந்த அருட்செயலை பாராட்டி, போற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய கனவு நினைவாகும் இந்த நன்நாளில் நாமும் அவரை வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம்" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications