எனக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் இது தான்! முதல்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பகிரங்க அறிவிப்பு!
சென்னை: தனக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலே நிதி நெருக்கடி தான் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
உங்களில் ஒருவன் கேள்வி பதில் மூலம் அரசின் நிதி நிலவரம் பற்றி மக்கள் அறிந்து கொள்ளட்டும் என்பதற்காக அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
மேலும், தனது சாதனை என்றால் அது மக்களின் முகங்களில் காணும் சிரிப்பு தான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

உங்களில் ஒருவன்
திராவிடவியல் கோட்பாடுகள், திராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் மக்கள் உள்ளங்களிலும் எழும் கேள்விகளுக்கு, திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் "உங்களில் ஒருவன் பதில்கள்" என்ற நிகழ்வு மூலம் பதிலளித்து வருகிறார். இந்நிலையில் முதல் கேள்வி பதில் நிகழ்சியில், ''ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் எவையெவை சாதனைகளாக இருக்கின்றன? எவையெவை சவால்களாக இருக்கின்றன?'' என்ற கேள்வி அவருக்கு முன் வைக்கப்பட்டது.

ஸ்டாலின் பதில்
அதற்கு அவர் அளித்த பதிலின் விவரம் வருமாறு; ''மக்கள் முகங்களில் நான் காணக்கூடிய சிரிப்புதான் என்னுடைய சாதனை! நிதி நெருக்கடிதான் இன்னும் இருக்கிற சவால்!''. தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக இதுவரை ஊடகங்களில் மட்டுமே கூறப்பட்டு வந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் அதை ஒப்புக்கொள்ளும் வகையில் இதனைத் தெரிவித்திருக்கிறார். இந்த நிதி நெருக்கடி காரணமாக தான் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க முடியவில்லை என்பதை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

பழனிவேல் தியாகராஜன்
தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது கவனிக்கத்தக்கது. அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் திட்டங்கள் பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து அது குறித்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஓராண்டுக்குள் நிதி நெருக்கடியிலிருந்து தமிழக அரசு மீண்டெழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வு விலக்கு
இதனிடையே உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் ''நீட் தேர்வுல இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா?'' என்ற கேள்வியும் முதல்வர் ஸ்டாலினுக்கு முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலின் விவரம் வருமாறு; ''முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காலதாமதம் ஆவதாலேயே நடக்காது என்று முடிவுக்கு வராதீர்கள்.நீட் தேர்வை வைத்து மிகக் கொடூரமான சமூக அநீதியை இழைத்துக்கொண்டு இருக்கிறது பா.ஜ.க. வரும் நாடாளுமன்றத் தேர்தல் அதற்குப் பாடம் புகட்டுவதாக இருக்கும்.''












Click it and Unblock the Notifications