ரெடியாச்சு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. ஆமா என்ன பேரு வைக்க போறாங்கன்னு தெரியுமா?
சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு என்ன பெயர் வைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அது எப்போது திறக்கப்படுகிறது என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை பிராட்வேயில் பேருந்து நிலையம் இருந்த நிலையில் அங்கு போக்குவரத்து அதிகம் பாதிக்கப்படுவதால் பேருந்து பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பிரச்சினையாக இருந்தது. இதையடுத்து விசாலமான பேருந்து நிலையத்தை அமைக்க முற்பட்டு கோயம்பேட்டில் அமைக்கப்பட்டது.

100 அடி சாலையில் உள்ள அந்த பேருந்து நிலையம் 1999ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 103 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டது. இதையடுத்து அந்த திட்டம் முடிக்கப்பட்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் 2002 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. அந்த பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டது.
எத்தனை பிளாட்பார்ம்கள்:இங்கு 6 பிளாட்பார்ம்கள் உள்ளன. ஒரே நேரத்தில் 270 பேருந்துகளை நிறுத்தும் அளவுக்கு இட வசதி உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அது போல் இங்கு இருசக்கர வாகனம், 4 சக்கர வாகன நிறுத்துமிடமும் உள்ளது. இந்த நிலையில் பண்டிகை காலங்களில் இந்த கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
40 ஏக்கர் பரப்பளவு: இதனால் கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய பேருந்து முனையம் கட்டப்பட்டது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதில் அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் என அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தொடங்கப்பட்டது எப்போது: 2019ஆம் ஆண்டு இந்த பேருந்து நிலைய கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இந்த பணி முழுமையடைந்தது. தற்போது இந்த பேருந்து நிலையம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பிறகு திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இதுவரை திறக்கப்படவில்லை. ஜூன் மாதம் 3 ஆம் தேதி இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
எப்போது திறப்பு: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 இல் பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் இந்த பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையம் என அழைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications