ஒரு லிட்டர் நல்லப் பாம்பு விஷம் ரூ.33 லட்சமா? அப்படி அந்த நஞ்சை என்னதான் செய்கிறார்கள் தெரியுமா?
சென்னை: பாம்பு விஷத்தை என்ன செய்கிறார்கள் தெரியுமா? அது போல் பாம்பு பண்ணை அமைப்பதால் என்ன லாபம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் நமசிவாய மூர்த்தி சதாசிவம் என்பவர் கூறியிருப்பதாவது: இந்தியாவிலுள்ள பாம்புப் பண்ணைகளில் எடுக்கப்படும் பாம்பின் விஷம் ஏறத்தாழ 90% அளவு உயிர்காக்கும் மருந்துகள் தயாரிப்பதற்கும் மீதம் 10% அளவு விஷம் பாம்புத் தீண்டலுக்கான விஷ முறிவு மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் உள்ள எல்லா விஷப் பாம்பு தீண்டல்களுக்கும் பொதுவான ஒரு நஞ்சுமுறி மருந்து தயாரிக்கப்படுகின்றது.
1972 -ம் ஆண்டு இந்திய வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 9 ,39 ,49 ஆகியனவற்றின்படி பாம்புகளைப் பிடிப்பது, கொல்வது, விற்பனை செய்வது மற்றும் பாம்புகளைப் பிடித்து வைத்து வளர்ப்பது ஆகியன தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். பாம்புகளை வைத்து வித்தை காண்பிப்பது குற்றமாகும்.
பாம்புப் பண்ணை வைத்துப் பாம்புகளைப் பாதுகாப்பதற்கும், அதிலிருந்து விஷம் எடுப்பதற்கும் , விற்பதற்கும் அரசினரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
பாம்பு விஷம் மிகவும் விலை மதிப்பு உள்ளது. இன்றய மதிப்பின்படி ஒரு லிட்டர் நல்ல பாம்பின் விஷம் இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ ₹33,63,485 ஆகும். ஒவ்வொரு இனப் பாம்பு விஷத்திற்கும் இதன் மதிப்பு வேறுபடும்!
நல்லப் பாம்பு , கட்டு விரியன் போன்ற பாம்புகளின் நரம்பு மண்டல செயல்பாடுகளைத் தடுக்கும் நியூரோடாக்சின் விஷம் இதய உயர் ரத்த அழுத்தத்தத்திற்கு வழங்கப்படும் உயிர்காக்கும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
கண்ணாடி விரியன் போன்ற பாம்புகளின் ஹிமோடாக்சின் விஷம் செல்களை அழிப்பதால் இதனை மேம்படுத்தி கேன்சர் செல்களை அழிக்கக் கூடிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றது.
பாம்புகளில் இருந்து விஷம் எடுப்பதென்பது மிகவும் ஆபத்தான ஒரு செயலாகும். சென்னை - மகாபலிபுரம் சாலையில் கானாத்தூர் அடுத்து பிரதான சாலையில் முதலைப் பண்ணை அமைந்துள்ளது. இந்த வளாகத்தினுள் 'இருளர்கள் பாம்பு பிடிப்பபோர் தொழிற் கூட்டுறவு சங்கம்' உள்ளது. இதன் உறுப்பினர்கள் பிடித்துக் கொண்டு வரும் பாம்புகள் இங்கு பெறப்பட்டு ரகத்திற்கேற்ப அவர்களுக்கு தொகை வழங்கப்படும்.
ஒரு பாம்பிடமிருந்து முதலில் ஒரு முறையும் அடுத்த 15 நாளில் மறு முறையும் விஷம் எடுக்கப்பட்டு அந்தப் பாம்பு கொண்டு வந்தவரிடம் திரும்பத் தரப்படுகிறது. அவர் அதனைப் பிடித்த இடத்தில் மீண்டும் விட்டுவிடவேண்டும்!
தினசரி குறிப்பிட்ட ஒரே ரக பாம்புகளிடமிருந்து மட்டுமே விஷம் எடுத்து பாம்பின் ரகம் வாரியாக தனித்தனியே சேமிக்கப்படுகிறது. பின்னர் இவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லிட்டர் அளவுள்ள பாம்பின் விஷம் எடுக்க ஏறத்தாழ 6 ஆயிரம் பாம்புகள் தேவைப்படும் என்பது 7-8-2009 தேதியில் கோவையில் ஒரு தினசரி நாளிதழ் வெளியிட்ட செய்தியாகும்!
நன்கு வளர்ந்த ஒரு பாம்பிலிருந்து அதிகபட்சமாக 10 மி.லி. விஷம் மட்டுமே ஒரு நேரத்தில் எடுக்க முடியும்! இது 3-8-2012 வெளியான நாளிதழில் மதுரை பதிப்பில் வந்த செய்தியாகும்!
கோவையில் வீடுகளில் புகுந்த விஷப் பாம்புகளைப் பிடிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர் நிர்மல் . இவர் கடந்த 2013 ல் ஒரு கண்ணாடி விரியன் பாம்பைப் பிடிக்கும்போது அந்தப் பாம்பினால் கடிபட்டு மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டும் கூட அங்கு உயிரிழந்தார். பாம்பு பிடிப்பது என்பது ஒரு ஆபத்தான வேலை ! பாம்புகளிடமிருந்து விஷம் எடுப்பது என்பது அதைவிட ஆபத்தான வேலை! என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications