தாம்பரத்தில் போலீஸ் வாகன சோதனை.. குப்பை லாரி டிரைவர்.. வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இப்படியா ஆகணும்
சென்னை: சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் வேளச்சேரி சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேளச்சேரி சாலையின் ஓரத்தில் தடுப்புகள் அமைத்து இருந்தனர். இந்த தடுப்புகளை கவனிக்காமல் வாகன சோதனையின்போது மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனம் மோதியதில் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் படுகாயம் அடைந்தார்.
சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட சென்னை மாநகர பகுதிகளில் போலீசார் தினசரி வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். மற்ற ஊர்களைவிட சென்னையில் வாகன சோதனை மிக தீவிரமாக நடைபெறும். சென்னையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கவே முடியாது..காரில் செல்வோரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து தான் பயணிக்க முடியும். பீக் அவர்ஸ்களிலும் சரி, மாலை நேரங்களிலும் சரி போக்குவரத்துபோலீசார் சோதனையை தீவிரமாக நடத்துவார்கள்.

ஹெல்மெட் அணியாமல் சென்றால் கண்டிப்பாக அபராதம் உறுதி. சென்னை மாநகர எல்லைக்குள் இருசக்கர வாகனத்தில் பின்னால் செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். அப்படிஇல்லாவிட்டால் அபராதம் உறுதி. அதேபோல் மாலை நேரங்களில் மது அருந்திவிட்டு வாகனங்களில் சுற்றிவிடமுடியாது. கண்டிப்பாக சிக்கி கொள்வார்கள்.அந்த அளவிற்கு சோதனை எப்போது இருக்கும்.
இந்நிலையில் சென்னை கிழக்கு தாம்பரம் வேளச்சேரி சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதற்காக வேளச்சேரி சாலையின் ஓரத்தில் தடுப்புகள் அமைத்து இருந்தார்கள்.
அப்போது கிழக்கு தாம்பரத்தில் இருந்து குப்பைகளை ஏற்றிக்கொண்டு தாம்பரம் நோக்கி சென்ற மாநகராட்சி குப்பை லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. சாலையில் போக்குவரத்து போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை டிரைவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திடீரென தடுப்புகளை பார்த்த டிரைவரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது மோதி கவிழ்ந்தது.
மோதிய வேகத்தில் குப்பை வாகனம் கவிழ்ந்து அதில் இருந்த குப்பைகள் சாலை முழுக்க கொட்டியது. இந்த விபத்தில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். குப்பை அள்ளும் லாரியில் வந்த துப்புரவு தொழிலாளி செல்லக்கண்ணு என்பவரும் காயம் அடைந்தார். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்தும் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய வாகனத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். சாலையில் கொட்டிய குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அள்ளி சென்றனர். மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் குப்பைகளை அகற்றும் தனியார் நிறுவனம் சார்பில் இந்த வாகனம் செயல்பட்டு வந்துள்ளது. இதை ஓட்டி வந்த டிரைவர் ராஜன், நேற்று தான் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளார் என்றும் வந்த முதல் நாளே விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications