"முதல்வரின் முகவரி".. வருவாய் துறைக்கு பறந்த உத்தரவு.. தமிழக அரசு வேற லெவல் மாஸ்.. பெருகும் நம்பிக்கை
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக, அடுத்தடுத்த அதிரடிகளை தமிழக அரசு மேற்கொண்டுவரும்நிலையில், இன்னொரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதாம்.
தமிழக அரசு துறைகளுக்கு பொதுமக்கள் புகார்கள், கோரிக்கைகளை கூறி மனுக்களை அனுப்புவார்கள்.. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்.. ஒருவேளை, அம்மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாதபோது முதல்வரின் தனி பிரிவுக்கு பொதுமக்கள் மனுக்களை அனுப்புவார்கள்.

முதல்வரின் முகவரி: இதற்காகவே, கடந்த 2021ல் திமுக ஆட்சி அமைந்ததுமே, "முதல்வரின் முகவரி" என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டது... அதாவது, முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு, "முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.
முதலமைச்சர் தனிப்பிரிவில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள சிறப்பு அலுவலர் மற்றும் தனிப்பிரிவின் கீழ் தற்போது உள்ள பல்வேறு அலுவலகப் பிரிவு அலுவலர்கள், முதல்வரின் முகவரி துறையின் கீழ் செயல்படும் அலுவலர்கள் ஆகியோர் முதல்வரின் முகவரி துறையின் கீழ் பணிபுரிவார்கள்.
கோரிக்கைகள்: முதல்வரின் கட்டுப்பாட்டிலேயே இந்த புதிய துறை செயல்படும் என்றும், முதல்வரின் நேரடிப் பார்வையில் இயங்கக்கூடிய திட்டம் என்பதால், இங்கு வரக்கூடிய மனுக்களும் கோரிக்கைகளும் விரைந்து தீர்க்கப்படும் என்றும் அப்போதே நம்பப்பட்டது. அதன்படியே, முதல்வரின் முகவரி திட்டத்தில் இதுவரை 10.53 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாம்.. சமீபத்தில் நடந்த அனைத்து துறை செயலர்கள் கூட்டத்தில் "முதல்வரின் முகவரி" மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது..
இதுகுறித்து வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் சொல்லும்போது, முதல்வரின் முகவரி திட்டத்தில், 2.51 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதுவரை 1.27 லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக வருவாய் துறையில் 52,837 மனுக்களும் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறையில் 17,807 மனுக்களும் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
தனி அறிவுறுத்தல்கள்: இதற்கான காரணம் குறித்து துறைகளின் உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது.. பொதுமக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை துரிதப்படுத்த துறைகளின் தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. மேலும், மத்திய அரசு துறைகள் சார்ந்து முதல்வரின் முகவரிக்கு வந்திருக்கும் மனுக்களைதனியாக ஆய்வு செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications