ரயிலில் மிடில் பர்த்தில் எப்போது தூங்க வேண்டும் தெரியுமா? ரயில்வே விளக்கம்
சென்னை: இன்றைய சூழலில் ரயில்களில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் இடம் கிடைப்பது கடினமாகிவிட்டது. 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால் மட்டுமே ரயிலில் இடம் பெற முடியும் என்கிற நிலையில். ரயில்களை பொறுத்தவரை மூன்று அடுக்கில் படுக்கை வசதி அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ரயிலின் நடுப்பகுதியில் படுக்கை வசதி உள்ளதால் எப்போது தூங்க வேண்டும் என்பதில் குழப்பம் பலருக்கும் உள்ளது. இந்நிலையில் ரயில்களில் நடுப்படுக்கையை முன்பதிவு செய்யும் பயணிகள் அந்த படுக்கையில் எப்போது தூங்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துளளது.
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் சரியாக இன்றிலிருந்து 60 நாட்கள் கழித்து போகும் ரயிலில் தான் முன்பதிவு செய்ய வேண்டும். காலை 8 மணிக்கு எல்லாம் ஓபன் செய்து முயற்சி செய்தால் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் எல்லாருமே 60 நாட்கள் கிழித்து போகலாம் என்று முன்பதிவு செய்ய முயற்சிப்பதால், டிக்கெட் கிடைப்பது முக்கியரயில்களில் கடினமாக உள்ளது. அதுவும் நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் படுக்கை வசதி கொண்ட ஏசி அல்லாத பெட்டிகள் அல்லது 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் கடினமாக உள்ளது. அப்படி போராடி டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பகலில் கூட தூங்க நினைக்கிறார்கள். ஆனால் நினைத்த நேரத்தில் எல்லாம் பகலில் ரயிலில் தூங்க முடியாது. இதுபற்றி பார்ப்போம்.

மிடில் பர்த் பிரச்சனை
பொதுவாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளே பயன்படுத்தப்படுகிறது. இதில் கீழ் படுக்கையை மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், உடல் நிலை சரியில்லாதவர்கள் அதிகமாக செல்கிறார்கள். மேல் படுக்கையை இளைஞர்கள், சிறுவர்கள் பயன்படுத்துவார்கள். நடுப்படுக்கையை அனைத்து வகை மக்களும் உபயோகப்படுத்துகிறார்கள் இந்த நடுப்படுக்கையை (மிடில் பெர்த்) பயன்படுத்தும் பயணிகளால் பல்வேறு பிரச்சினைகள் ஓடும் ரயில்களில் நிகழ்ந்து வருகிறது.
ரயில்வே விளக்கம்
அதில் தூங்குவதற்கு பயன்படுத்துவதாலேயே அதிக அளவு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பயணிகள் இருக்கை தொடர்பாக ரயில்வே வாரியம் விதிமுறை வகுத்துள்ளது. அந்த விதிமுறையில் பயணிகள் படுக்கைகளை எப்போது பயன்படுத்தலாம்? என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை பார்க்கலாம்
எப்போது தூங்கலாம்?
படுக்கை வசதி கொண்ட ஏசி மற்றும் ஏசி அல்லாத முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் நடுப்படுக்கையைப் பயன்படுத்தும் பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் உறங்குவதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருக்கை வசதியாக பயன்படுத்த வேண்டும.
டிக்கெட் பரிசோதகர் தலையிடுவார்
எனினும் இந்த விதியில் இருந்து சிலருக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் தூங்க விரும்பினால் டிக்கெட் பரிசோதகரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், கீழ் இருக்கையில் உள்ள சக பயணியின் ஒப்புதல் அளித்தால் நேர வரம்பை நீட்டித்து கொள்ள முடியும். அதாவது கீழ் படுக்கையில் உள்ள பயணி அனுமதித்தால் எவ்வளவு நேரம் என்றாலும் உறங்கலாம்.
மேல் படுக்கை என்றால் வரம்பே இல்லை
சில பயணிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தூங்க முயலும்போது, பயணிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற நேரங்களில் டிக்கெட் பரிசோதகருக்கு பயணிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் உடனடியாக தலையிட்டு தீர்வு அளிப்பார்கள். அதேநேரம் மேல் படுக்கையில் தூங்குவதற்கு எந்த நேர வரம்பும் கிடையாது. நடுப்படுக்கையை முன்பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக ரயில்வே விதிகளை பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும். இந்த விதிமுறைகளை முறையாக தெரிந்துகொண்டு பயணிகள் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே விழிப்புணர்வு செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications