திமுக எம்எல்ஏ மகன் மருமகளுக்கு எதிரான வழக்கு.. களமிறங்கிய ப.பா.மோகன்.. ஹைகோர்ட்டில் என்ன நடந்தது?
சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை கொடுமை செய்ததாக, தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் போலீசார் மெத்தனமாக நடந்து கொள்வது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், போலீசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வேலை பார்த்த போது, ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினும் தன் உடலில் சூடு வைத்தும், அடித்தும் சித்திரவதை செய்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பட்டியல் சாதிப் பெண் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி புகார் அளித்தார். இந்த புகார் ஒருபுறம் எனில், அந்த பெண் அளித்த பேட்டிகள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளும் கட்சி எம்எல்ஏ மகன்,மருமகள் மீது எழுந்த இந்த புகார் மிகப்பெரிய தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியது. அதிமுக, பாஜக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளை தாண்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சியினருமே இந்த விவகாரத்தில்அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இதையடுத்து அந்த கள்ளக்குறிச்சி பெண்ணிண் புகாரின் பேரில், கடந்த ஜனவரி 18 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தினர். மதிவாணன் மற்றும் மெர்லினை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த பிரச்சனை எப்படி வெளிய தெரியவந்தது: ஜனவரி 16 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, அவரது முகம், கை, கால், தலை மற்றும் பிற இடங்களில் ஏற்பட்டுள்ள காயத்தை பார்த்த மருத்துவர்கள், அது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விசாரித்த போது தான் பணி செய்த வீட்டில் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். அதன்பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில் நீலாங்கரை மகளிர் போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க தொடங்கினர்.
இந்நிலையில் பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை தனிப்படை போலீசார் கடந்த மாதம் ஆந்திராவிற்கு சென்று கைது செய்தனர். இவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதிமன்ற எம்.நிர்மல்குமார் விசாரித்து வருகிறார்.
நேற்று நடந்த விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜரான வக்கீல் ப.பா.மோகன், 'மனுதாரர்கள் இருவரும் இந்த பெண்ணை மிகவும் கொடுமைப்படுத்தி உள்ளார்கள். விரும்பிய படிப்பைக்கூட படிக்க அனுமதிக்கவில்லை. அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற பிறகு இந்த வழக்கி்ல் போலீசார் இதுவரை மேல் விசாரணை நடத்தவில்லை. கைதாகியுள்ள நபர்களிடமும் விசாரணை நடத்தவில்லை. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் 60 நாட்களி்ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை" என்று வாதிட்டார்.
போலீஸ் தரப்பில், இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார்கள். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி நிர்மல்குமார், 'தனி மனித உரிமை சார்ந்த வழக்குகளில் போலீசார் ஏன் மெத்தனப்போக்குடன் நடந்து கொள்கின்றார்கள்?, இந்த வழக்கில் நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அன்றைய தினமே ஜாமீன் மனுக்கள் மீதும் தீர்ப்பு அளி்க்கப்படும்" என்று தெரிவித்தார். இதன்படி திமுக எம்எல்ஏ மகன் மருமகளுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது வெள்ளிக்கிழமை தெரியும்.












Click it and Unblock the Notifications