அண்ணாமலைக்கு எல்லா பக்கமும் கேட் போட்ட டெல்லி! விரக்தியில் பேசுவது இதனால்தான்! இது புதுசா இருக்கே!
சென்னை: நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டது விரக்தியினால் என சீனியர் பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. அதாவது பாஜகவில் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடுவதில்லை.

தமிழக பாஜக தலைவரை எல்லாரும் இணைந்தே தேர்வு செய்வோம். தமிழக புதிய தலைவருக்கான தேர்தலில் நான் யாரையும் கை காட்டவில்லை. தமிழகத்தை விட்டு நான் எங்கும் செல்லவில்லை. டெல்லிக்கும் நான் செல்ல மாட்டேன். நான் தொண்டனாகவே இருப்பேன் என குறிப்பிட்டிருந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெரும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
நாளை பிரதமர் வருகை
மேலும் நாளை தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் நிலையில் அண்ணாமலை இப்படி அறிவித்திருப்பது பேசு பொருளாகியுள்ளது. அது போல் தமிழகம் வரும் பிரதமரை எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் சந்திக்க தனித்தனியே நேரம் கேட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்?
இதனால் அதிமுகவில் ஓபிஎஸ் மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து சன் நியூஸ் தொலைக்காட்சியில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: பதவிகளுக்கு போட்டி என்பது சாதாரணமாக கட்சிகளில் நடக்கும் இயல்பான விஷயம். ஆனால் பாஜகவில் தலைவர் என்பவர் ஏகமனதாக தேர்வு செய்யப்படுபவர்.
தேர்தல்
இவர் அந்த தேர்தலில் நிற்பதற்கான இசைவு மத்தியில் இருந்து கொடுக்கப்படவில்லை. அதனுடைய விரக்தியின் வெளிப்பாடாகத்தான் அண்ணாமலை இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.
ஓபிஎஸ் சந்திப்பு
ஏப்ரல் 6ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேரம் கேட்டுள்ளனர். இதனால் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைத்துக் கொள்ள மாட்டார்கள். அதிமுக இதை ஏற்கெனவே பாஜகவிடம் தெளிவுப்படுத்திவிட்டது.
வாய்ப்பே இல்லை
அதிமுகவுக்கு துரோகம் செய்த, அதாவது இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் இணைந்தால் அது நிச்சயம் அதிமுகவுக்கு பலமாக இருக்காது என்பதை அதிமுக நிர்வாகிகள் டெல்லி பாஜக மேலிடத்தில் தெளிவாக கூறிவிட்டனர். இதனால் அவர்கள் அதிமுகவில் சேர்வதற்கு வாய்ப்பில்லை.
ஓபிஎஸ் என்ன சொல்வார்
ஓபிஎஸ் என்னதான் பிரதமரிடம் கேட்டாலும், அவர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு கோரிக்கை வைக்கத்தான் இயலும். பாஜகவின் எண்ணம் திமுகவை வீழ்த்துவதுதான். எனவே இந்த பஞ்சாயத்துகளில் தீவிரமாக இறங்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.
புதிய ரோல் ரெடி?
டிடிவி தினகரனுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் ஏதாவது ஒரு ரோல் கொடுப்பதாக இருக்கும். அது கூட பாஜக தரப்பில் இருந்துதான் கொடுப்பார்கள். அதிமுகவுக்கும் அதற்கும் சம்மந்தம் இருக்காது. இவ்வாறு ஆர்.கே. தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications