இதுதான் அதிரடி.. அன்று, கவுண்டிங் மையத்திலிருந்து தள்ளி விடப்பட்ட அப்பாவு.. இன்று சட்டசபை சபாநாயகர்
சென்னை: ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ அப்பாவு தமிழக சட்டசபை சபாநாயகராகியுள்ளார். கடந்த தேர்தலில் 49 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றதால் சட்டசபைக்குள் செல்ல முடியாத அவர், இப்போது சட்டசபையையே கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவராக நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ அப்பாவு மற்றும், துணைத்தலைவராக பிச்சாண்டி ஆகிய திமுக எம்எல்ஏக்கள் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் அப்பாவு சபாநாயகரானது சமூக வலைத்தளங்களில் பலராலும் சிலாகிக்கப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றில் நீர் எடுத்த பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்தவர்.. போராட்ட நாயகன் அப்பாவு! யார் இவர்?
தபால் ஓட்டு
இதற்கு காரணம் அவர் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 49 ஓட்டில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம், தோற்றார். தபால் ஓட்டுக்களில் 203 ஓட்டுக்களை செல்லாத ஓட்டுக்கள் என அறிவிக்கப்பட்டதால் வெற்றி கிடைக்கவில்லை என்பது அப்பாவு குற்றச்சாட்டு.
|
தள்ளிவிடப்பட்ட அப்பாவு
இதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, வாக்கு எண்ணும் மையத்தில் அப்பாவு கேட்கப்போக, துணை ராணுவப்படையினர், அவரை வெளியே பிடித்து தள்ளினர். இந்த வீடியோ அப்போது திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்படியாக சட்டசபைக்குள் போகும் வாய்ப்பை இழந்த அப்பாவு இப்போது, அந்த சபையையே கட்டுப்படுத்தும், வானளாவிய அதிகாரம் கொண்ட சபாநாயகராகியுள்ளார்.
தேர்தலில் வெற்றி
அப்பாவு தொடர்ந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் தீர்ப்பு வெளியாகும் முன்பாக இந்த தேர்தலில் மக்கள் அப்பாவுவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி எம்எல்ஏவாக்கிவிட்டனர். இன்பதுரையை விட, 4,492 ஓட்டுகள் அதிகம் பெற்று அப்பாவு வெற்றி பெற்றுள்ளார்.
யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு
இதுகுறித்து ஜாண் கென்னடி என்பவர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளதை பாருங்கள்:
யாருக்கு வாய்க்கும்
இந்த கொடுப்பினை...
எந்த அவையில் உங்களை நுழைய தடுத்தார்களோ,
அந்த பேரவையின் சாவியே
இப்போது உங்களிடம்....
மக்கள் தீர்ப்பை மதிக்காமல் உங்களை வெளியே நிறுத்திய
அம்மையார் கூட
இன்றைக்கு இருந்திருந்தால்
உங்களால் அவர் கையாளப்படும்
அவை நாயகர் பதவி உங்களுக்கு...
தள்ளி விட்டார்களே
வாக்கு எண்ணிக்கை கூடத்தில்
அன்று உங்களை தள்ளி விட்ட காவல்துறை இனி தள்ளி நின்று சல்யூட் அடிக்கும்....
யாரும் உங்களை தொட்டு விடாமல் தூரம் காக்கும்....
யாருக்கு நீங்கள் விரோதம்? எவருக்கு நீங்கள் வேண்டாதவர்..?
கலைஞர் வார்த்தெடுத்த பகை காட்டா தயாளம் நீங்கள்...
அவையில் எப்போதும் காட்டுங்கள் உங்கள் சார்பின்மையை...
அடங்காதவரிடம் கண்டிப்பாய் காட்டுங்கள் உங்கள் பராக்கிரமத்தை...
உங்கள் விசுவாசத்தையே நொடிதோறும் தலைவரிடம் காட்டுங்கள்...
பெரும் பதவி
மானமில்லாமல் இருந்தால் போதும் மாண்புமிகுவாகலாம் என்ற கெட்ட காலத்தில்
வராத பதவி, மாண்புகள் மட்டுமே நிறைந்த கழக ஆட்சியில் கிடைப்பது ஒரு வரம்...
எல்லோரையும் போல் நிற்க வைக்காமல்.... நம் தவமாய் கிடைத்த தலைவரே நீங்கள் வரும்போது நிற்கிற
பெரும் பதவிக்கு உங்களை தேர்ந்தது எம் பெருமை... தானைத் தலைவர் பெயர்காக்க உயர்மானம் நிறைந்த பேரவைத்தலைவர் அப்பாவுவே வருக! கழகத்தின் வெகுமானமாய் பேரவையில் மிளிர்க.....
இவ்வாறு அந்த பதிவு கூறுகிறது.