பிறந்தநாள் வாழ்த்துக்கு இலக்கிய தமிழில் நன்றி கூறிய கமல்.. நாப்பரப்பு- நாட்பரப்பு! அப்படின்னா என்ன?
சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு இலக்கிய நடையில் நன்றி கூறி போட்ட ட்வீட்டை எல்லாருக்கும் புரியும் வகையில் விளக்கியிள்ளார் சிவகங்கை அரசு மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா.
இதுகுறித்து டாக்டர்பரூக் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் இலக்கணம் அறிய நடிப்பிலக்கணத்தில் கரைகண்ட திரு. கமல்ஹாசன் அவர்களின் இந்தக் கீச்சுப் பதிவை பகுப்பாய்வு செய்வதென முடிவு செய்து ஆரம்பிக்கிறேன்.
பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன நண்பர்களுக்கு நன்றி பகிர்வதாய் அமைந்தது அந்த கீச்சு. ( ட்விட்டரில் ட்வீட் செய்வது கீச்சுவது என்று தமிழில் அழைக்கப்படுகிறது). தமிழ் அறிந்த ஆன்றோர் சான்றோருக்கானதல்ல இப்பதிவு கடந்த சில வருடங்களாக தமிழுடன் தொடர்பு அத்துப்போனவர்களுக்கானது.

பேச்சு மொழியாகவும் கேட்டல் மொழியாகவும் இருக்கும் தமிழ் படிக்கும் மொழியாகவும் எழுதும் மொழியாகவும் இருந்தால் மட்டுமே நிலைக்கும். உயிர்ப்புடன் இருக்கும் என்பதால் என்னுள் தினமும் தமிழில் படிப்பதையும் எழுதுவதையும் கடமையாகவே ஆக்கிக் கொண்டேன். இது நான் தமிழுக்குச் செய்யும் சிறு பணியாகவே பார்க்கிறேன். எனவே தயவு கூர்ந்து இந்தப்பதிவை அரசியல் ரீதியாகவோ வேறு எந்த ரீதியாகவோ அணுகுதல் வேண்டாம்.
சரி வாருங்கள் தமிழாடுகளே கீச்சுப்புல்லை அடிவரை மேய்வோம்... ( எம்ஆர்பி பரீட்சை எழுத இருக்கும் மருத்துவர்களுக்கும் உதவக்கூடும்)
"பரந்த வெளியில் ஆரத்தழுவ
அவாவும் ஆதுரக்கை
விரித்திருந்தேன்"
பரந்த வெளியில் - விசாலமான இடத்தில்(WIDE SURFACE AREA)
ஆரத்தழுவ - அன்புடன் கட்டியணைக்க
அவா - ஆசை / விருப்பம் ( 90களில் கடிதம் எழுதியவர்களுக்குத் தெரியும் . இங்கு அனைவரும் நலம்
அங்கு அனைவரின் நலம் அறிய அவா அல்லது ஆவல் என்று எழுதுவோம்)
ஆதுரக்கை - ஆதுரம் + கை
அடுத்த வரிகளில் "விரித்திருந்தேன்" என்று கூறுவதால் "ஆதுரம் + றெக்கை" என்று இலக்கணமின்றிப் பிரித்தாலும் பொருள் வருகிறது.
ஆதுரம் என்றால் பரிவும் அக்கறையும் கலந்து உணர்ச்சி. இதற்கு நேரெதிர் உணர்ச்சி "ஆதிக்கம்" இது அக்கறையற்ற அத்துமீறல். ஆதுரத்துடன் கைகளை விரித்திருந்தேன். இங்கு றெக்கை என்று பொருள் கொண்டால் அந்த றெக்கை கொண்ட பறவை சக்கரவாகப்பறவையாக இருக்கக்கூடும்.
அடுத்த வரிகளில்
"ஆயிரம் லட்சமென ஆகாயத் துளிகள் வாழ்த்தாய்ப் பெய்தன"
என்கிறார்
ஆகாயத் துளிகளை மட்டும் பருகி வாழும் சக்கரவாகப் பறவையாக தன்னை உருவகம் செய்து கொண்டிருப்பது தெரிகிறது.
திரு.வைரமுத்து "என் சுவாசக் காற்றே" படத்தில் " சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைத்தேனோ" என்ற பாடலில் "சக்கரவாகமோ மழையை அருந்துமாம். நான் சக்கரவாகப் பறவையாவேனோ" என்பார்.
அடுத்த கீச்சில் "திரைக் கலைஞர், நண்பர் என ஒவ்வொரு துளிக்கும் தனித்தனியே நன்றி சொல்ல நாப்பரப்பும் நாட்பரப்பும் போதா"
இதில் நாப்பரப்பு = நாவின் பரப்பு
நாக்கு + பரப்பு
சக்கரவாகமாக தன்னை உருவகப்படுத்தியிருந்தமையால் கிடைத்த வாழ்த்துகளை மழைத்துளிகளாக உவமை செய்து அவையனைத்துக்கும் நன்றி கூற நாவினால் முடியாது. அவ்வாறு நன்றி கூறிக் கொண்டே சென்றால் நாட்களும் பத்தாது.
என்பதை
"போதா" என்று முடிக்கிறார்
"போதாது" என்பதை "போதா" என்று முடிக்கிறார்
இது ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்ச வகையில் வரும்.
நாப்பரப்பும் நாட்பரப்பும் போதாமல் தவிக்கிறேன் என்று முடிக்க வேண்டியதை "போதா" என்று முடித்து விட்டார்.

"மனமே தருகிறேன்.. ஏந்திக் கொள்க" அனைவருக்கும் அன்பை வெகுமதியாகத் தருகிறேன். பெற்றுக் கொள்க என்று எழுதாமல் ஏந்திக் கொள்க என்று கூறும் தன்மையில் அவரது மனம் இந்த வாழ்த்துகளாலும் அன்பாலும் கனமாக ஆனதை சுட்டுகிறார்.
லேசான பொருளை பெற்றுக் கொள்ளலாம் . கனமான பொருளைத் தான் ஏந்த வேண்டியிருக்கும். இன்னும் ஏந்துதல் என்பதற்கு கவனமாகப் பெற்றுக் கொள்ளுதல் எனும் பொருளும் கொள்ளலாம் . என் மனதை உடைத்து விடாமல் கவனத்துடன் பெற்றுக் கொள்க என்று HANDLE WITH CARE என்ற அர்த்தத்திலும் பொருள் கொள்ள முடியும் .
திரு.வைரமுத்து கண்ணாமூச்சி ஏனடா பாடலில் "என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையோ அதற்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையோ நெஞ்சின் அலை உறங்காது" என்பார். ஆம்... ஒவ்வொருரின் மனதின் மீதும் HANDLE WITH CARE ஒட்டப்பட்டுத் தான் இருக்கிறது. நாம் தான் பார்த்து பக்குவமாக கையாள வேண்டும்
தீயினால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே நாவினால் சுட்ட வடு
இவ்வாறு கமல்ஹாசனின் தூய தமிழ் ட்வீட்டிற்கு டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications