சென்னையில் காய்ச்சல் உள்ளவர்களில் 60% பெருக்கு ஃப்ளூ பாதிப்பு! மருத்துவர்கள் சொன்ன ஷாக் தகவல்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பும் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை பொறுத்த அளவில் காய்ச்சலென்று வருபவர்களில் 60% பேருக்கு ப்ளூ இருக்கிறது என தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் தற்போது வரை 300 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க சென்னையில் சமீப நாட்களாக காய்ச்சல் மற்றும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொடர்பான தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் இதுபோன்று காய்ச்சல் வருவது இயல்பானதுதான்.

ஆனால் இந்த முறை சென்னையில் காய்ச்சலென்று வருபவர்களில் 60% பேருக்கு ஃப்ளூ இருக்கிறது. நடுத்தர வயது மக்களுக்கு இது 6 நாட்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும். லேசான காய்ச்சல் இருக்கும். ஆனால் இதே குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு ப்ளு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இதற்கான தடுப்பூசிகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி பிறந்து 6 மாதங்கள் ஆன குழந்தைகள் தொடங்கி அனைத்த வயதினரும் எடுத்துக்கொள்ளலாம்.
அதேபோல காய்ச்சல் இருக்கிறது என்றால் பலரும் வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக்கொள்கின்றனர். ஆனால், 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் கட்டாயம் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். ஏனெனில் ப்ளூ பாதிப்பு இருந்து, அது கண்டுகொள்ளாமல் விடப்பட்டால் நிமோனியா பாதிப்பை கூட இது ஏற்படுத்திவிடும். எனவே உடல் நலன் விஷயத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
அதேபோல டெங்கு தடுப்பு மருந்து குறித்து கூறியுள்ள மருத்துவர்கள், "இந்த தடுப்பு மருந்து முழுமையான வீரியத்தில் செயல்படவில்லை. டெங்கு வைரஸில் 4 வகை இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் இதில் 5 வகைகள் இருக்கின்றன. இது ஒவ்வொன்றும் வித்தியாசமானது. எனவே இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலானதாக இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications