நொடிக்குநொடி சர்ப்ரைஸ்.. தமிழ்நாட்டில் பத்திரம் ரிஜிஸ்தர் பண்ணதுமே, தானியங்கி முறையில் பட்டா மாற்றம்
சென்னை: தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் முறை தமிழகத்தில் அமலாக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
நிலம் வாங்கும் உரிமையாளர்கள், அந்த இடத்திற்கு பட்டா வாங்குவதற்கு படாதபாடு படவேண்டியிருக்கிறது.. இதற்காகவே நடையாய் நடந்து காலவிரயம் ஏற்படுகிறது. அதனால்தான், பத்திரப்பதிவு துறையில் ஆன்லைன் மூலம் பட்டா பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது...

அதேபோல, தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் செய்யும் திட்டமும், கடந்த 15ம் தேதி முதல் தமிழகத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு முடிந்த ஒரு வாரத்திற்குள்ளேயே சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கிரையம்: இதன் மூலம் உட்பிரிவு செய்யும் தேவை இல்லாத நில கிரையங்களில் தானியங்கி முறையில் சில மணி நேரத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யலாம். எனவே கிரையம் பெறுபவர் துரிதமான பட்டா மாறுதல் சேவையைப் பெற தனது கைப்பேசி எண் மற்றும் ஆதார் எண்ணை கட்டாயமாகவும், சரியானதாகவும் வழங்க வேண்டும்.
ஒரு நிலத்தையோ, வீட்டையோ அல்லது வேறு சொத்தையோ வாங்குபவர் அதன் பரப்பளவில் மாற்றங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில் உடனடியாக அவரது பெயர் ஆன்லைன் பட்டா மாறுதல் இணையதளத்தில் புதுப்பிக்கப்படும்...
வெப்சைட்டுகள்: அந்தவகையில், மாவட்டம், தாலுகா, நகரம்/கிராமம், சர்வே நம்பர், உட்பிரிவு போன்ற உள்ளீடுகளைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் ஆன்லைன் பட்டாவை https://eservices.tn.gov.in என்ற அரசு வெப்சைட்களில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
சொத்தைப் பதிவு செய்தவுடன், புதிய உரிமையாளரின் பெயர் உடனடியாக பட்டா சான்றிதழில் தோன்றும் என்றும், அதனை https://tnreginet.gov.in/portal/ என்ற வெப்சைட்டில் பார்த்து கொள்ளலாம்.
நடைமுறைகள்: இந்நிலையில், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரான மதுசூதன் ரெட்டி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், இந்த நடைமுறை குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார்.
அதில் "நிலத்தை வாங்குபவர்கள் பத்திரப்பதிவு முடிந்தவுடன் பட்டாவை உடனடியாக ஆன்லைனில் செய்து கொள்ளலாம்.. டவுன்லோடும் செய்து கொள்ளலாம். ஆனால், குறிப்பிட்ட சொத்தினை விற்பவரின் பெயரில் தனிப்பட்ட பட்டா இருந்தால் மட்டுமே பெயர் மாற்றம் ஏற்படும். அதேபோல, அந்த சொத்தின் பரப்பளவும் மாறாமல் இருக்கவேண்டும்.
சார் பதிவாளர்: ஒவ்வொரு மாதமும் தமிழகத்தில் துணை சார் பதிவாளர் அலுவலகங்களில் 85,000 ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதில், உட்பிரிவு செய்ய தேவைப்படாத ஆவணங்கள் 33,000 உள்ளன.. எனவே, நிலம் வாங்குபவர்களுக்கு பத்திரப்பதிவு செய்யும்போது SMS மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அதேபோல, பத்திரப்பதிவு முடிந்து, பெயர் மாற்றம் ஆனவுடன் அதனை தெரியப்படுத்த வாங்குபவருக்கும் விற்பவருக்கும் SMS அனுப்பப்படும்.
ஒருவேளை, சொத்து விற்பவர்கள் பெயரில் பட்டா இல்லாவிட்டால், வாங்குபவர்கள் இ-சேவை மையம் மூலம் பட்டா பெற விண்ணப்பிக்கலாம்.. அப்படி விண்ணப்பித்தால், அடுத்த 15 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்படும். உட்பிரிவு செய்ய தேவைப்படும் பட்டா கோரிக்கைகளுக்கு, 30 நாட்களுக்குள் அதற்கான கணக்கெடுப்பு முடித்துதர வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது.
சொத்து விற்பனை: முன்பெல்லாம் நில அளவையர்கள் மற்றும் பணியாளர்கள் குறைவாக இருந்ததால் பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது, அந்த இடங்கள் நிரப்பப்பட்டு விட்டதால் பட்டா வழங்க காலக்கெடு நிர்ணயித்திருக்கிறோம்.. எனவே, இந்த தானியங்கி பட்டா பெயர் மாற்றும் வசதியில், உட்பிரிவு செய்யத் தேவைப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் அடுக்குமாடி குடியிருப்பு, தனி வீடு, நிலம் வாங்குபவர்களுக்கு இது உதவியாக இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications