ஒரு கையெழுத்து போட சொல்லுங்கள்.. வெளியே வரலாம்.. டெல்லி அனுப்பிய தூது.. செந்தில் பாலாஜி சொன்ன பதில்
சென்னை: செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது போல், அவரது தம்பியை சரணடையச் சொல்லுங்கள் அல்லது அவரை அப்ரூவராக மாறச் சொல்லுங்கள் என்று செந்தில் பாலாஜிக்கு டெல்லி தரப்பிலிருந்து தூது அனுப்பி அழுத்தம் தரப்பட்டுள்ளதாம்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 9 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

கடந்த இரண்டு வாரம் முன் விசாரணை: அதன்பின் இரண்டு வாரம் முன் இதில் விசாரணை நடந்தது. அப்போது 19வது முறையாக அவரின் காவல் நீட்டிக்கப்பட்டது. கடந்த விசாரணையின் போது, பி.எம்.எல்.ஏ-வின் கீழ் 230 நாட்கள் சிறையில் இருந்தும் அவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும் என்று நீதிபதி கேட்டிருந்தார்.
சிறையில் அடைப்பு: 48 மணி நேரத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டால், அரசின் கடைசி தர ஊழியர் கூட சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும்போது, இவ்வளவு காலம் சிறைவாசத்திற்குப் பிறகும் ஒருவரை எப்படி அமைச்சரவையில் தொடர அனுமதிக்க முடியும் என்று நீதிபதி ஆச்சரியப்பட்டார்.
"அரசு ஊழியர் விஷயத்தில் காட்டப்படும் கடுமை இப்படி இருக்கும்போது, சிறைக்குள் இருக்கும் போது, இலாகா இல்லாமல் அமைச்சராகத் தொடரும் ஒருவர் இங்கே இருக்கிறார். என்ன வேடிக்கை இது. நீங்கள் பொதுமக்களுக்கு என்ன வகையான செய்தியை வழங்குகிறீர்கள்? என்று அமைச்சர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யம சுந்தரத்திடம் நீதிபதி கேட்டார். கடந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
அமைச்சர் ராஜினாமா: இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த அவர், சமீபத்தில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சர் பதவி இல்லையெனில் ஜாமீன் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இந்த ராஜினாமா நடந்தது. ஏனெனில், அமைச்சராக இருக்கிறார் ; சாட்சிகளை கலைப்பார் என்றே அமலாக்கத்துறை தொடர்ந்து சொல்லி வந்ததுதான்.
அமலாக்கத்துறை வாதம்: இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் விசாரித்தார். இதில் அமலாக்கத்துறை வைத்த வாதத்தில், சகோதரர் அசோக் குமார் தலைமறைவாக உள்ளார். அவர் இப்படி மறைவாக உள்ள நிலையில் எப்படி செந்தில் பாலாஜியும் ஜாமீனில் வெளியில் வர முடியும்.
அவர் வந்தால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும். காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற காரணத்தை எப்படி ஜாமீனுக்கு காரணமாக சொல்ல முடியும். அதை மட்டும் அடிப்படையாக வைத்து தொடர்ச்சியாக ஜாமின் மனு தாக்கல் செய்ய முடியாது. காலம் கடக்கிறது என்றால்.. வழக்கை துரிதப்படுத்தலாம். அவர் ஒரே காரணத்தை வைத்து மீண்டும் மீண்டும் ஜாமீன் கேட்கிறார். அதை எப்படி கொடுக்க முடியும்.
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிப்பதற்கு பதிலாக இந்த வழக்கை முடிக்க வேண்டும். விரைவாக விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், என்று வாதம் வைத்துள்ளனர் .
ஜாமீன் இல்லை - ஒரே ஒரு கையெழுத்து: அந்த வகையில், ராஜினாமாவுக்குப் பிறகும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது போல், அவரது தம்பியை சரணடையச் சொல்லுங்கள் அல்லது அவரை அப்ரூவராக மாறச் சொல்லுங்கள். ஒரே ஒரு கையெழுத்துப் போட்டால் போதும் என்று செந்தில் பாலாஜிக்கு டெல்லி தரப்பிலிருந்து தூது அனுப்பி அழுத்தம் தரப்பட்டுள்ளதாம்.
இதனை ஏற்காத செந்தில் பாலாஜி, என் தம்பி தலை மறைவாக இல்லை; அவர் இருக்கும் இடம் அமலாக்கத்துறைக்குத் தெரியும். என்னை வழிக்கு கொண்டுவர டெல்லி போடும் நாடகத்துக்கு என்னையே கதை வசனம் எழுதச் சொல்கிறார்கள். என்னால் முடியாது. என் கட்சி தலைவர் என்னை வெளியே கொண்டு வருவார். தேர்தல் சமயத்தில் நான் வெளியே இருப்பேன் என்று தூது வந்தவரிடம் சொல்லி வருகிறாராம் செந்தில் பாலாஜி.












Click it and Unblock the Notifications