என்னாது மதிமுகவுக்கு 2 சீட்டா.. ? ... கட்டையை போடும் திமுக சீனியர்கள்!
சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் சீனியர்களே அதற்குத் தடை போட்டு வருதாக கூறப்படுகிறது.
ஒரு சதவீதம் கூட வாக்கு வங்கி இல்லாத மதிமுகவுக்கு ஏன் இரண்டு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என திமுகவில் குழப்பக் குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளதாம். திமுக கூட்டணியில் தங்களுக்கு 4 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று கூறிவந்தது மதிமுக. ஆனால் ஆரம்பத்திலேயே இதை மறுத்துவிட்டது திமுக. இதன் பின்னர் படிப்படியாக இறங்கி வந்த மதிமுக குறைந்தது இரண்டு தொகுதிகளையாவது ஒதுக்குங்கள். இல்லையென்றால் கூட்டணியில் நீடிப்பது குறித்து யோசிக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் இம்முறை மதிமுகவை கூட்டணியில் இருந்து வெளியே அனுப்ப ஸ்டாலின் விரும்பவில்லை என்று தெரிகிறது. இம்முறை தங்களது அணிக்கு வைகோவின் பிரச்சாரம் மிகுந்த பலனை கொடுக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார். ஆகவே அவரை கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட சொல்லுங்கள் மீதமுள்ளதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த ஒரு தொகுதி என்ற நிலைப்பாட்டில் திமுக சற்றும் இறங்கி வராததற்கு ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஒரு காரணம் என்கிறார்கள். 2006 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானபோது செய்தியாளர்களை சந்தித்த வைகோ தன்னுடைய அண்ணா நகர் வீட்டுக்கு, ஸ்டாலின் மகனும் மருமகன் சபரீசனும் ரவுடிகளோடு வந்து வெடி கொளுத்திப் போட்டனர், என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அந்த சம்பவத்தில் சபரீசனின் அடையாள அட்டை கீழே விழுந்ததை எடுத்து பத்திரிக்கையாளர்களிடமும் காண்பித்துள்ளார் வைகோ.
அதோடு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட வைகோ தலைமையிலான மதிமுக இரு இடங்களில் டெப்பாசிட்டை பறிகொடுத்ததோடு வெறும் 3.5% வாக்குகளை மட்டுமே பெற்றது. அதற்கு அடுத்த வந்த சட்டமன்ற தேர்தலில் 29 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றியை பெறவில்லை என்பதோடு 27 இடங்களில் டெபாசிட்டையும் பறிகொடுத்தது. வெறும் 0.86% வாக்குகளை மட்டுமே பெற்றது.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திமுகவிற்கு ஆதரவளித்து பேசி வரும் வைகோவுக்கு சீட் ஒதுக்குவது என்ற நிலையில் சபரீசன் டீம் இதையெல்லாம் முன்வைத்து அவர்களுக்கு இரண்டு சீட்டுகள் என்பது மிக அதிகம் என்று கூறியுள்ளனர். ஒரு சீட் வழங்குவதே அதிகமானது என்றும் கூறியுள்ளனர். இதைகேட்டு வைகோ மனம் வெதும்பியதாக கூறப்படுகிறது.
இந்த முறை வைகோவை தங்களது அணியில் இருந்து வெளியேற்ற விரும்பாத ஸ்டாலின் அவரை சமாதானப்படுத்த எண்ணி மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியும் கூடவே வைகோவை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கிவிடுவோம் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து இடச்சொல்லுங்கள் என்று கூறினாராம்.
திமுகவின் இந்த ஆஃபரை ஏற்றுக்கொண்டு வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவாரா அல்லது 2006 தேர்தலில் சீட் பிரச்சனையால் திமுக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறி அதிமுக அணியில் தஞ்சம் அடைந்ததுப் போல இம்முறையும் வெளியேறுவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்