திராவிட மாடல் பிரிவினையைத் தூண்டுகிறதா? சிறந்த நகைச்சுவை.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் பதிலடி!
சென்னை: பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல் என்று மத்திய அமைச்சர் ஒருவர் சொல்லி இருப்பது சிறந்த நகைச்சுவை. பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்துக்குச் சொந்தக்காரர்களான அவர்கள், நம்மைப் பார்த்து பிரிவினைவாதிகள் என்று சொல்வது நான் வேடிக்கையாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்செஞ்சி மஸ்தான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அய்யா காதர் மொகிதீன், ஜவாஹிருல்லா, பீட்டர் அல்போன்ஸ் உள்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர், அரசு துறைச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-

இன்றைய தினம் இந்த ஆய்வுக்கூட்டத்தின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நாம் எப்போதோ சந்திப்பவர்கள் அல்ல அவ்வப்போது சந்தித்துக் கொண்டே இருப்பவர்கள்தான். சந்தித்து கோரிக்கை வைத்தால் தான் நிறைவேற்றப்படும் என்பதாக இல்லாமல், நீங்கள் என்ன வேண்டும் என்று சிந்தித்தால் அதனை தலைவர் செயல்படுத்தித் தரும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் இருந்துள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய எல்லார்க்கும் எல்லாம் வழங்கும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். எல்லார்க்கும் எல்லாம் என்ற வார்த்தைக்குள் பெரும்பான்மையும் உண்டு, சிறுபான்மையினரும் உண்டு. அனைவரும் உண்டு, திராவிட மாடல் என்பது எவரையும் யாரையும் பிரிக்காது. பிளவுபடுத்தாது உயர்வு தாழ்வு கற்பிக்காது.
இன்றைய தினம் நாளிதழ் ஒன்றில், பேட்டி அளித்துள்ள ஒன்றிய அமைச்சர் ஒருவர் 'பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல்' என்று சொல்லி இருக்கிறார். இதைவிடச் சிறந்த நகைச்சுவை பேட்டி இருக்க முடியாது. பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்துக்குச் சொந்தக்காரர்களான அவர்கள், நம்மைப் பார்த்து பிரிவினைவாதிகள் என்று சொல்வது நான் வேடிக்கையாக உள்ளது. அனைவருக்கும் அனைத்தையும் கிடைக்கச் செய்யும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடாது என்று சொல்லும் அவர்கள் தான் பிரிவினைவாதிகள். இந்த வரிசையில் சிறுபான்மையினரின் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடாது என்று சொல்லும் அவர்கள் தான் பிரிவினைவாதிகள். இந்த வரிசையில் சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் முன்னோடி அரசாக நமது அரசு உள்ளது.
குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்களுக்கு உரிய வாய்ப்பை வழங்குவதன் மூலமும், அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதி செய்து. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலமும் சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த அரசு தொடர்ந்து, ஆதரவு வழங்கி வருகிறது. சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் இந்த அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக 2007-ஆம் ஆண்டில் சிறுபான்மையினர் நல இயக்குநரகம்" உருவாக்கியதே தலைவர் கலைஞரின் அரசு தான் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். 2007-ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கு 35 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இந்தச் சங்கங்களின் மூலம் ஆதரவற்ற விதவைகள் மற்றும் வயதான முஸ்லிம்/கிறிஸ்தவ பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. நாங்கள் இப்போது ஆட்சிக்கு வந்ததும், மேலும் கூடுதலாக 5 மாவட்டங்களில் சங்கங்களை உருவாக்கி தந்துள்ளோம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்களுக்கான விடுதிகள் துவங்கப்பட்டு, தமிழ்நாட்டில் தற்போது 18 சிறுபான்மையினர் நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் ரூபாய் 14 இலட்சம் செலவில் செம்மொழி நூலகங்களும்" ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ரூபாய் 5:90 இலட்சம் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு சுருவிகள் வழங்க ஆணையிடப்பட்டு கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடுதிறன் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் மூலம் தனித்திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பிற்காக மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications