"பச்சை கலர்" பால் விலையும் உயர போகுது என கொளுத்தி வீசிய டிடிவி தினகரன்
பச்சை கலர் பால் பாக்கெட் விலையும் உயர போவதாக தினகரன் கூறுகிறார்
சென்னை: ஆரஞ்சை தொடர்ந்து, ப்ளூ, பச்சை நிற என மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத திமுக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பகீர் தகவலை கூறியிருக்கிறார்.
ஆவின் பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் அரசு உயர்த்தியுள்ளது... கொழுப்பு நிறைந்த ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் அரை லிட்டர் 24 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக விற்பனையாகிறது.
அதே போல ஒரு லிட்டர் ஆவின் பால் பாக்கெட் 60 ரூபாயாக விற்பனை செய்யப்படும் ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.. இந்த அறிவிப்பானது பல்வேறு தரப்பில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

எருமைப்பால்
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் எதற்காக பால்விலை உயர்வு என்ற விளக்கத்தையும் கூறினார்.. "ஆவினில் பால் கொள்முதல் விலையை, பசும்பால் லிட்டருக்கு ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.41-லிருந்து ரூ.44-ஆகவும் உயர்த்தப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தமிழக முதல்வர் உயர்த்தியிருக்கிறார். இந்த பால் விலையேற்றம் சாதாரண மக்களுக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

ஷாக்கிங்
முழுக்க முழுக்க வாணிப நோக்கத்தோடு விற்பனை செய்யப்படுகிற ஆரஞ்சு நிற பாக்கெட் பாலுக்கான விலை மட்டும்தான் உயர்த்தப்பட்டுள்ளது.. இதற்குமுன் ரூ.48-க்கு விற்பனை செய்து வந்தோம், இதே நிறைகொழுப்பு பாலை மற்ற மாநிலங்களிலும், மற்ற தனியார் நிறுவனங்களும் ஏறக்குறைய ரூ.70-வரை விற்பனை செய்கின்றனர். பாஜக ஆளுகின்ற குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் விலையைவிட ரூ.10 குறைவாக, அதாவது ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஆரஞ்ச் கலர்
தமிழகத்தில் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை ஏற்கெனவே 11 லட்சம் பேர் வாங்கி வருகின்றனர். இந்த பாலை சந்தா அட்டைகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு அதே விலைதான், அதில் எந்த மாற்றமும் கிடையாது. அவர்களுக்கு இந்த பால் ரூ.48-க்கும், வணிக பயன்பாட்டிற்காக வாங்குபவர்களுக்கு மட்டும் ரூ.60-க்கும் விற்பனை செய்கிறோம்.. மத்திய அரசு வரலாற்றில் இல்லாத நிகழ்வாக, பாலுக்கும் ஜிஎஸ்டி விதித்துள்ளது. இதனால் விற்பனை விலை உயர்ந்துள்ளது.. இருந்தாலும், மக்களை பாதிக்காத வகையில்தான் இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.

வாசன் + அட்டாக்
எனினும், எதிர்க்கட்சிகள் இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.. அந்தவகையில், ஜிகே வாசன், அன்புமணி ராமதாஸை தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அந்த ட்வீட்டில், "ஆவின் ஆரஞ்சு பால் விலையை திமுக அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

பச்சை கலர்
மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத திமுக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஆவின் ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தினகரன் பதிவிட்டுள்ளார்.. இந்த விலை ஏற்றம் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் திரண்டு எதிர்ப்பு கூறி வருவது அதிர்வலையை உண்டாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications