விஜய் கையில் 3 மெகா ப்ளான்? திமுகவை வீழ்த்த முடியுமா? தவெக பலம் என்ன?
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக அறிக்கை விட வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது என்பதற்காக விளக்கத்தை மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்திருக்கிறார்.
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு, இதுவரை ஒரு தேர்தலைக் கூட அந்தக் கட்சி சந்திக்கவில்லை. ஆனால், அதை மையமாக வைத்து ஊடகங்களில் மிகப்பெரிய அளவுக்கு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சினிமா துறையில் உள்ள புகழ் வெளிச்சத்தால் விஜய்க்கு தமிழக மக்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பு இருக்கும் என்று பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அது எந்தளவுக்கு உண்மையாக இருக்கப் போகிறது என்பதை எதிர்காலம்தான் முடிவு செய்ய இருக்கிறது.

ஆனால், அக்கட்சி ஒரு தேர்தலைச் சந்தித்து பலத்தை நிரூபிப்பதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் விஜய்தான் என்பதைப் போல சிலர் ஒரு கருத்தைப் பரப்பி வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து துணை முதல்வர் பதவியை விஜய் பெற்றுவிடுவார் என்ற அளவுக்கு வியூகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதிமுகவுடன் கூட்டணி என்பது ஆதாரமற்ற செய்தி என்று நேற்று அறிக்கை விட்டு மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுகிறோம். மக்கள் மத்தியில் எங்கள் கட்சி அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்துடன் அஇஅதிமுகவுடன் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, உண்மைக்குப் புறம்பான செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது. பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே எங்கள் கட்சியின் குறிக்கோள்" என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
விஜய்யின் அதிமுக கூட்டணி குறித்து இந்த அறிக்கை திடீரென்று வெளியானதால் பலரும் குழப்பத்தில் உள்ளனர். ஏன் இதை இப்போது மறுக்க வேண்டும்? தொலைக்காட்சி விவாதங்களில் பல வாரங்களாகப் பேசப்பட்டு வந்த போது மறுக்காமல் விட்டுவிட்டு, பத்திரிகையில் செய்தியாக வந்த பிறகு ஏன் மறுக்க வேண்டும் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிறார் விஜய். அதற்காக பலம் அவரிடம் இல்லை. அவரது கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 75 லட்சம் என்கிறார்கள். ஆனால், அது ஓட்டாக மாறுமா? எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்பது தெரியவில்லை. சிலர் 10% வாக்குகளை விஜய் பெறக்கூடும் என்கிறார்கள். அது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது.
திமுக கூட்டணியில் 12 கட்சிகளுக்கு மேல் உள்ளன. அதை ஒற்றை கட்சியாக தவெக வெற்றி கொள்வது நடக்காத காரியம். பல கட்சிகள் கூட்டணி தேவை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டார் விஜய். கொள்கை எதிரி என மறைமுகமாகச் சொல்லிவிட்டார். அடுத்து உள்ள பெரிய கட்சி அதிமுகதான். அதையும் இப்போது கழற்றி விட்டுள்ளார். அவர் திட்டம்தான் என்ன?
அது பற்றி பத்திரிகையாளர் ப்ரியன், "அதிமுகவுடன் விஜய் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தையே நடத்தவில்லையா? என்று கேட்டால், நடத்தினார்கள் என்று 10 நாட்கள் முன்பாகவே நான் சொல்லி இருந்தேன். விஜய் தரப்பில் 60 சீட்டுக் கோரிக்கை வைக்கப்பட்டது. துணை முதல்வர் பதவியும் கேட்கப்பட்டது. அதில் பேரம் படியவில்லை. இப்போது கூட்டணி இல்லை என மறுத்துள்ளனர். விஜய் ஊழலை எதிர்க்கிறார். கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி, அதிகாரத்திலிருந்த கட்சி அதிமுக. அதன் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை மீறி விஜய் கூட்டணிக்குப் போனால், அதற்கான விமர்சனத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
தேர்தலுக்கு இன்னும் 1 வருடத்திற்கு மேல் உள்ளது. 10 மாதங்கள் முன்னதாகவே அதிமுக அணியில் தவெக இடம்பெற்றால், தேர்தலுக்கு முன்பே அதை திமுக விமர்சிக்கும். அது விஜய்க்கு எதிராக மாறும். தேர்தல் நெருக்கத்தில் என்றால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. அதை மனதில் வைத்து தற்காலிகமாக விஜய் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என மறுத்துள்ளார் என்றே நான் புரிந்துகொள்கிறேன். அதிமுகவுடன் கூட்டணி பேச்சு நடப்பதாக வெளியான தகவலே பொய் என்று புஸ்ஸி ஆனந்த் மறுத்துள்ளார்.

ஆனால், ஆட்சியில் பங்கு என்று அதிமுகவை அறிவிக்க வேண்டும் என தவெக அழுத்தம் கொடுத்தது உண்மை. அதை எடப்பாடி செய்யவில்லை. விஜய் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்கு திமுக கூட்டணியை அசைத்துப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் விசிகவை லேசாக அசைத்துப் பார்த்தார்கள். அது நடக்கவில்லை. இன்றைக்கு நடக்கவில்லை. எதிர்காலத்தில் அது நடக்கலாம். தேர்தல் நெருக்கத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
அடுத்ததாக தன் கட்சி பலத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் திட்டம் வகுக்கிறார். அது போதாது என்ற நிலை ஏற்பட்டால், கூட்டணிக்குப் போகத் தயாராக இருக்கிறார். அந்தக் கூட்டணிக்கான வாய்ப்பாக அதிமுகதான் முதல் இடத்தில் இருக்கிறது. ஏனெனில் 20% வாக்குகள் அக்கட்சியிடம் உள்ளது. எனவே அதிமுக இருந்தால் வெற்றி எளிமையாகும். அதை விஜய் அறிவார்.
ஆகவே, இப்போது அதிமுக கூட்டணி இல்லை என விஜய் தரப்பு சொல்வதால் அது அப்படியே நிரந்தரமாக இருக்கும் என சொல்ல முடியாது. தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி உருவாகலாம். அதற்காக நிறைய வாய்ப்புகள் உள்ளன. இப்போதைக்கு திமுக விமர்சிக்க வாய்ப்பு தரக் கூடாது என்பதற்காக தவெக மறுத்துள்ளது. அந்த மறுப்பு தற்காலிகமானதுதான். நிரந்தரமல்ல" என்கிறார்












Click it and Unblock the Notifications