மக்களே உஷார்.. இந்த செயலிகளை தப்பித்தவறிக்கூட டவுன்லோடு செஞ்சிடாதீங்க.. எச்சரிக்கும் போலீசார்
சென்னை: ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை பரிசோதிக்கலாம் என்ற பெயரில் உலா வரும் செயலிகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகரித்து விட்ட இந்த காலத்தில் மக்களின் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. எதையாவது பொருளை வாங்க வேண்டும் என்றால் கடைக்கு போய் மணிக்கணக்கில் நேரத்தை செலவிட்ட காலம் போய், தற்போது வீட்டில் இருந்தபடியே பொருட்களை ஆர்டர் போட்டு விட முடிகிறது.

பிடித்த உணவகங்களில் பிடித்தமான உணவு பொருட்களை ஆர்டர் செய்தால் சுடச்சுட வீட்டு வாசலுக்கு வந்து மணக்க மணக்க கொண்டு வந்து கொடுத்து விட்டு போய்விடுகிறார்கள். அதுமட்டும் இன்றி எந்த ஒரு தகவல் என்றாலும் இணையத்திலும் எளிதாக தேடி கண்டுபிடித்து விடலாம். இன்னும் சொல்லப்போனால் உலகமே உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது என்று சொல்லும் அளவுக்கு செல்போன்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது.
மக்களிடையே செல்போன்கள் பயன்பாடு அதிகரித்து விட்ட நிலையில் செல்போன் மூலமாக பல மோசடிகளும் தற்போது அரங்கேறி வருகின்றன. அதாவது, செல்போனில் தரவிறக்கம் செய்யப்படும் செயலிகள் மூலமாக பல மோசடிகள் நடப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக கடன் செயலிகள் போன்றவற்றை டவுன்லோடு செய்து விட்டு கடனை வாங்கும் போது நமது தரவுகளை எடுத்துக் கொண்டு பல்வேறு மோசடி செயல்களில் அந்த செயலி நிறுவனங்கள் ஈடுபடுவதாகவும் சீனா போன்ற நாட்டில் இருந்து இந்த செயலிகள் இயக்கப்படுவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து சைபர் கிரைம் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், உடல் நலம் குறித்த செயலிகளை செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையில், "ஸ்மார்ட் போன்களில் ஆக்சிஜன், சர்க்கரை அல்லது ரத்த அழுத்த அளவை சரிபார்ப்பது போன்ற எந்த செயலிகளையும் தரவிறக்கம் செய்ய வேண்டாம்.
ஏனெனில், இந்த செயலிகள், கைரேகை உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி ஆதார் மற்றும் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் பறிபோக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே கை ரேகையை பயன்படுத்தும் எந்த ஒரு செயலியையும் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது" என்று கூறினார்.
உடலில் ரத்த அழுத்தம், இதய துடிப்பின் அளவு போன்றவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பலரும் தற்போது தங்கள் செல்போன்களில் இது தொடர்பான செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை குறித்து முறையாக உறுதி செய்யாமலும் பலரும் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருவதாக பரவலாக சொல்லப்படும் நிலையில் போலீசார் இத்தகைய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் தங்கள் செல்போனில் தேவையற்ற செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம் என்றும் தேவைப்படும் செயலிகளை டவுன்லோடு செய்யும் போது அதன் நம்பகத்தன்மையை ஒருமுறைக்கு இருமுறை செக் செய்த பிறகே மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் சைபைர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications