கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பாதீங்க.. லோன், சர்வீஸ் சார்ஜ்.. ரிசர்வ் வங்கி அவசர எச்சரிக்கை
சென்னை: வங்கிக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் ரிசர்வ் வங்கி பெயரிலேயே நடக்கும் மெகா மோசடி அம்பலமாகியுள்ளது. "உங்கள் கடனை நாங்கள் ரத்து செய்து தருகிறோம்" என ஆசை வார்த்தை கூறும் மர்ம கும்பல்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு ஆர்பிஐ அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்களின் பேச்சை நம்பி தவணை கட்டத் தவறினால், வட்டி குட்டிக்கரணம் போடுவதோடு சிபில் ஸ்கோரும் காலியாகிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வட்டி கட்ட முடியாமல் தவிப்பவர்களைக் குறிவைத்து, ஒரு புதிய மோசடி வலை நாடு முழுவதும் விரிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாகவே கடன் சுமையில் இருப்பவர்கள் யாரிடமாவது உதவி கிடைக்காதா என்றுதான் ஏங்குவார்கள். இந்த மனநிலையைத் தான் மோசடி கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
இதையொட்டிதான், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஒரு தவறான தகவல் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
ரிசர்வ் வங்கி அவசர எச்சரிக்கை
அதாவது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் (NBFC) வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட தொகையைத் தங்களிடம் கட்டினால் அந்தக் கடனில் இருந்து முழுமையாக விடுதலை பெற்றுத் தருவதாகவும் சில நபர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இதை நம்பி பலரும் தங்களின் சேமிப்புப் பணத்தை இழந்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
இந்தக் கும்பலின் செயல்பாடுகள் மிகவும் தந்திரமாக இருக்கின்றன. கடனைத் தள்ளுபடி செய்து தருகிறோம் என்று கூறி, முதலில் உங்களிடம் "சட்டக் கட்டணம்" அல்லது "சர்வீஸ் சார்ஜ்" என்ற பெயரில் ஒரு தொகையைக் கேட்பார்கள். நீங்கள் பணத்தைக் கொடுத்ததும், ரிசர்வ் வங்கியின் பெயரையும் லோகோவையும் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஒரு போலி சான்றிதழை உங்கள் கையில் திணிப்பார்கள்.
சர்வீஸ் சார்ஜ் - கடன் தள்ளுபடி
"இனி நீங்கள் வங்கிக்கு ஒரு பைசா கூட கட்ட வேண்டாம், உங்கள் கடன் ரத்தாகிவிட்டது" என்று நம்ப வைப்பார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அந்தச் சான்றிதழுக்குக் காலணா கூடப் பெறாது. இது சுத்தமான ஏமாற்று வேலை. அதனால்தான் அப்பாவி மக்களிடம் லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டும் இந்த கும்பல் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி இப்போது அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விளக்கத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளது. கடன் தள்ளுபடி செய்யும் அதிகாரம் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது வெளி அமைப்புகளுக்கோ கிடையாது.
செட்டில்மென்ட் - போலி அமைப்புகள்
ஒரு நபர் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்வதோ அல்லது "செட்டில்மென்ட்" செய்வதோ என்பது அந்த வங்கியும், கடன் வாங்கிய நபரும் நேரடியாகப் பேசி எடுக்க வேண்டிய முடிவு. இதில் மூன்றாம் நபர்களுக்கு சட்டப்படி எவ்வித இடமும் இல்லை. இத்தகைய போலி அமைப்புகளுக்கு அங்கீகாரம் கிடையாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களுடைய பேச்சை நம்பி வங்கிக் கடனுக்கான மாதத் தவணையை (நிறுத்தினால் என்ன நடக்கும் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். நீங்கள் தவணை கட்டத் தவறினால், வட்டியும் அபராதமும் சேர்ந்து உங்கள் கடன் சுமை மலைபோல உயரும். அதைவிட ஆபத்தானது உங்கள் "சிபில் ஸ்கோர்" சரிவது...
ஒருமுறை உங்கள் கடன் தகுதிப் புள்ளி குறைந்துவிட்டால், அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் அவசரத் தேவைக்கு எந்த வங்கியிலும் உங்களால் கடன் வாங்கவே முடியாது. எதிர்காலத்தையே இது கேள்விக்குறியாக்கிவிடும்.
கடன் தள்ளுபடி நம்பாதீங்க
எனவே கடன் தள்ளுபடி என்ற பெயரில் வரும் விளம்பரங்களையோ, வீடியோக்களையோ பார்த்து ஏமாந்து விடாதீர்கள். உங்களால் தவணை கட்ட முடியவில்லை என்றால், ஒளிந்து கொள்ளாமல் நேரடியாக உங்கள் வங்கி மேலாளரை சந்தித்துப் பேசுங்கள். வங்கிகள் வழங்கும் கடன் மறுசீரமைப்பு அதாவது Debt Restructuring போன்ற சட்டபூர்வமான வழிகளை நாட வேண்டும்.
அதை விடுத்து, ஆதாயம் இல்லாமல் அள்ளிவிடும் இதுபோன்ற மோசடி கும்பலிடம் சிக்கிப் பணத்தையும் நிம்மதியையும் இழக்க வேண்டாம் என்பதே ரிசர்வ் வங்கியின் இந்த எச்சரிக்கையின் முக்கிய நோக்கமாகும்.












Click it and Unblock the Notifications