அதிமுக கூட்டணி.. பிளவுபடுத்த நினைக்காதீங்க! சூடாக பதிலளித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. சில பேச்சுக்கள் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறதே தவிர கூட்டணி பலமாக உள்ளது என்று பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அதிமுக பாஜக கூட்டணியை பிளவுப்படுத்த நினைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்று கூறி வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதே போல் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்க வைத்து அக்கட்சியின் தலைமை அதிரடி முடிவை எடுத்துள்ளது.

கூட்டணி ஆட்சி கிடையாது
இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியதாக எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி இதனை திட்டவட்டமாக மறுத்தார். அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றும், 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்றாலும், அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார். கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்த நிலையில் அதிமுகவின் தம்பிதுரையும் இதனையே கூறியுள்ளார். தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெற்றாலும் அதிமுகவே தனித்து ஆட்சி அமைக்கும் என்று திட்டவட்டமாக கூறினார். பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையிலும் கூட அதிமுக தனித்துதான் ஆட்சியை அமைக்கும். காமராஜர் இருமுறை ஆட்சி அமைத்தபோதும் கூட்டணி ஆட்சி இல்லை. அண்ணா, எம்ஜிஆர் ஆட்சி அமைத்தபோதும் கூட்டணி ஆட்சி இல்லை.
கூட்டணியை பிளவுப்படுத்த வேண்டாம்
திமுகவுக்கு கடந்த 2000 ஆம் ஆண்டில் பெரும்பான்மை கிடைக்காதபோதும், கருணாநிதி தான் முதல்வராக அமர்ந்தார். கூட்டணி ஆட்சி தமிழகத்தில் இல்லை. 2026 சட்டசபை தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமிதான் தலைமை வகிப்பார் என்று கூறினார். இதற்கிடையே நெல்லையில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் நயினார் நாகேந்திரன் என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அதிமுக பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டு இருப்பதாக சில தகவல்கள் பரவின. இந்த நிலையில் இதற்கு பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்துள்ளது. அதில், "அதிமுக பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. சில பேச்சுக்கள் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறதே தவிர கூட்டணி பலமாக உள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கான வியூகம் அமைக்கும் பணியில் தற்போது தீவிரம் காட்டி வருகிறோம்" என்று பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் இன்று தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுக பாஜக கூட்டணியை பிளவுப்படுத்த நினைக்க வேண்டாம் என்று கூறினார். அவர் கூறுகையில், திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களது இலக்கு. அதிமுக பாஜக கூட்டணியை யாரும் பிளவுப்படுத்த நினைக்க வேண்டாம் என்று கூறினார்.
2026 சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒரு புறம் ஆளும் திமுக மெகா கூட்டணியுடன் தயாராக இருக்கிறோம் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கு மேல் வெற்றி பெறுவோம் என்றும் கூறி வருகிறது. இதேபோல் எதிர்க்கட்சியான அதிமுகவும் பாஜகவுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளது. இதனை அமித்ஷாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது.
அன்புமணி ராமதாசின் பாமகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று கூறி தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தனித்து போட்டியிடுவோம் என்றும் அறிவித்துள்ளது. எனினும் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் இருப்பதால் கூட்டணிகள் இப்படியே இருக்குமா அல்லது வேறுபடுமா என்பதை காலம் தீர்மானிக்கும்.












Click it and Unblock the Notifications