அம்மனாக மாறிய மாணவிகள்..ஒயிலாட்டம்..டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரியில் ஆடிப் பெருக்கு
சென்னை: டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி மாணவிகள் தமிழர் பாரம்பரிய முறைப்படி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். ஒயிலாட்டம், கும்மி என பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்த மாணவிகள், பல்வேறு விதமான சாதங்கள் அடங்கிய சித்ரா அன்னம் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பிற தின்பண்டங்களை பகிர்ந்துண்டு உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.
Recommended Video
விளைநிலங்களுக்கான முதல் மழையைக் கொண்டுவரும் மாதம் ஆடி. ஆறுகளில் புது வெள்ளம் பாயும். புதிய விளைச்சலுக்குக் கட்டியம் கூறும். வளமையின் அடையாளமான அந்த வெள்ளப் பெருக்கை மக்கள் படையல் இட்டு வரவேற்கிறார்கள். இந்த வரவேற்பு வைபவம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பதினெட்டாம் பெருக்கு.
ஆடி, பருவ மழை தொடங்கும் மாதம். தமிழ்நாட்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலம். இந்தப் புதுப்புனல்தான் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக காவிரிச் சமவெளிப் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதில் இருந்துதான் தோன்றியது.
தைப்பொங்கல். தீபாவளி போன்ற சமய வழிபாட்டுப் பண்டிகையிலிருந்து ஆடிப் பெருக்கு மாறுபட்டது. இப்பண்டிகை ஒரு குடும்பத்திற்குள் அனுசரிக்கப்படுவதல்ல. இது சமூகத் திருவிழா. மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆற்றங்கரைக்குச் சென்று பொங்கிவரும் புது வெள்ளைத்தைக் கண்டு மகிழ்வார்கள். அதற்குப் படையலிடுவார்கள். விளக்குகள் ஏற்றி வந்தனம் செய்வார்கள். புதுப் புனலில் நீராடி பூஜிப்பார்கள். இவை எல்லாம் ஆடிப் பதினெட்டாம் நாள் செய்யப்படுவதால் இது பதினெட்டாம் பெருக்கு என அழைக்கப்படுகிறது.

ஆடிப்பெருக்கு
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று ஆடிப் பெருக்கு கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன. தமிழர் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவிகள், பாவாடை தாவணி மற்றும் சேலைகளில் வலம் வந்தது கண்ணைக் கவர்வதாக இருந்தது.

தண்ணீரில் தீபம்
இந்நிகழ்ச்சியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். இந்தத் திருவிழாவுக்காக சிறப்பாக அமைக்கப்பட்ட சிறு குளத்தில் பெண்கள் அகல் விளக்குகளில் தீபமேற்றி மிதக்க விட்டனர். மாணவிகள், பல்வேறு விதமான சாதங்கள் அடங்கிய சித்ரா அன்னம் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பிற தின்பண்டங்களை பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர்.

களை கட்டிய ஆடிப்பெருக்கு
பெண்கள் நவதானியங்களின் முளைப் பயிர்களை எடுத்துச் சென்றனர். மேலும் இந்த விழாவில் வளையல் கடை, மருதாணி சேவை, கிளி ஜோசியம் போன்ற கிராமத்துத் திருவிழாக் கடைகள் இடம் பெற்றிருந்தன. மேலும், மாணவிகளும் கைவினைப் பொருட்கள், உணவுப் பண்டங்கள் போன்ற கடைகளை அமைத்திருந்தனர். இது ரம்மியமான கிராமப்புற சூழ்நிலையை உருவாக்கியது.

ஒயிலாட்டம்
இந்தக் கொண்டாட்டத்தின் உச்சகட்டமாக, மாணவிகளின் கிராமிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கும்மி இடம்பெற்றன. அதுமட்டுமல்லாமல் கிராமப்புற கலாச்சார உடை அலங்காரம், உறியடி விளையாட்டு மற்றும் கோலப்போட்டிகள் கொண்டாட்டத்திற்கு சிறப்பு சேர்த்தன. ஒட்டுமொத்தத்தில் தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை நினைவுபடுத்துவதாக இந்நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய கொண்டாட்டம்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன், "மனித சமுதாயத்தின் முன்னேற்றம் மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு, நமது பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாப்பதுடன் வரலாற்றையும் அறிந்து கொள்வது அவசியம். இது போன்ற விழாக்கள் வாயிலாக, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நமது கலாச்சாரத்தின் மகத்துவத்தை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்வார்கள். தமிழர் பண்பாட்டை, இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கம் தான் இந்தக் கொண்டாட்டங்கள் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications