போதையில் இளம்பெண் படுகொலை –கஞ்சாவை ஒழிக்க கடும் நடவடிக்கை தேவை- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை : சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே, கஞ்சா போதையில் இளம்பெண் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், போதைப்பொருட்களால் இத்தகைய குற்றங்கள் நிகழ்வதையும் கருத்தில் கொண்டு போதை ஒழிப்பு உத்திகளை வகுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், போதைப் பொருள்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினரோடு அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், பிற மாநிலங்களில் இருந்து போதைப்பொருள் தமிழகத்திற்கு வருவதை தடுக்கவும் அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, போதைப் பொருள் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார். போதை பொருளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது :
சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே மகிழுந்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்ற 4 பேர் கும்பல், கொளுத்துவாஞ்சேரி என்ற இடத்தில் முள்புதருக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இளம் பெண்ணை கடத்தி சீரழித்த நால்வரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போது கூட அவர்களின் போதை தெளியவில்லை எனத் தெரிகிறது. போதை எத்தகைய சமூகக் குற்றங்களுக்கு வழி வகுக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்!
போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்து ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், போதைப்பொருட்களால் இத்தகைய குற்றங்கள் நிகழ்வதையும் கருத்தில் கொண்டு போதை ஒழிப்பு உத்திகளை வகுக்க வேண்டும்!
பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்வது தான் நல்லாட்சிக்கான இலக்கணம் ஆகும். அதற்கான நடவடிக்கைகளையும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications