தவறு செய்வான்.. பாடம் கற்பான்.. செய்ய மாட்டான்.. "டாக்டர்" இன்று போட்ட டிவீட்.. புரிகிறதா..!
டாக்டர் ராமதாஸ் அடுத்த ட்வீட் போட்டு குழப்பி விட்டுள்ளார்.
சென்னை: டாக்டர் ராமதாசின் ஒரு ட்வீட்... ஒரே ஒரு ட்வீட் போதும்... அன்றைய நாள் முழுவதும் எல்லா கட்சிகளும் மண்டையை பிய்த்து கொள்வதுதான் வேலையாக இருக்கிறது.
இதுவரைக்கும் கூட்டணி சம்பந்தமாக வாயே திறக்காதது பாமகதான். ஆனால் "நான்தான் கூட்டணி பற்றி சொல்வேன், யாரும் யூகத்தில் எதுவும் சொல்லக்கூடாது" என்று கறாராக சொல்லி விட்டார்.
அதனால் கூட்டணியை தவிர பெரும்பாலும் இவரது ட்வீட்கள் சமூக நிகழ்வுகளை கண்டித்தோ, வரவேற்றோதான் உள்ளன. ஆனாலும் ஏற்கனவே பதிவிட்ட ஒருசில ட்வீட்களுக்கு இன்னும் விடை தெரியாமலேயே உள்ள நிலையில், இப்போதும் ஒரு ட்வீட் பதிவிடப்பட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
நல்லாவே இருக்கு
இந்த ட்வீட்கள் எல்லாமே வெளிநாட்டு அறிஞர்களின் பொன்மொழிகள்தான். எல்லா பொன்மொழிகளும் ரொம்ப நல்லாவே இருக்கிறது. படித்ததும் நன்றாகவே புரிகிறது. ஆனால் இதை எதற்காக ராமதாஸ் சொல்கிறார், யாரை சொல்கிறார், ஏன் சொல்கிறார், இதெல்லாம் தெரியாததால், நன்றாக புரியும் பொன்மொழிகள்கூட சில சமயம் புரியாமலேயே போய்விடுகிறது.
|
தவறுகளை தவிர்ப்பான்
இன்றைக்கு ஒரு பதிவில் டாக்டர் ராமதாஸ் சொல்லி உள்ளதாவது: "ஒரு திறமையான மனிதன் ஒரு தவறு செய்வான். அதிலிருந்து பாடம் கற்பான். அத்தகையத் தவறை அதன்பின் அவன் செய்ய மாட்டான். ஆனால், அறிவார்ந்த மனிதனோ, ஒரு திறமையான மனிதனை கண்டறிந்து அவனது அனுபவத்திலிருந்தே, ஒட்டுமொத்தமாக தவறுகளை தவிர்ப்பதை கற்றுக்கொள்வான்! - ராய் எச். வில்லியம்ஸ்" என்று பதிவிட்டுள்ளார்.
புரியவே இல்லை
எல்லாம் சரி.. யார் தப்பு செய்தார்கள், யார் தப்பே செய்யவில்லை என்றுதான் தெரியவில்லை. யார் திறமையான மனிதன், யார் அறிவார்ந்த மனிதன்? என ராமதாஸ் சொல்கிறார் என்றும் புரியவில்லை.
திமுகவா?
பாமக ஏதாவது இதற்கு முன்பு தவறு செய்துவிட்டு, இப்போது தன்னை மாற்றிகொண்டதா? அல்லது அனுபவத்தால் இப்போது ஒட்டுமொத்தமாக தவறுகளை தவிர்க்க கற்று கொண்டுவிட்டதா? அல்லது திமுக தரப்பில் இன்னமும் தவறுகள் நடந்து கொண்டே இருக்கிறதா? திறமையான மனிதர்களை திமுக இன்னும் சந்திக்கவில்லை என்று சொல்கிறாரா? ஆக மொத்தம் டாக்டர் என்ன சொல்கிறார் என விளங்கவில்லை. அடுத்த ட்வீட்டில் ஆவது ஏதாவது புரிகிறதா என பார்ப்போம்.