மெரினாவில் நுரை.. நடுக்கடலில் சோப்பு போட்டு குளிப்பார்களோ.. கருப்பண்ணணை அனுப்புங்க- ராமதாஸ்
சென்னை : சென்னை மெரினாவில் அலையோடு அலையாக நுரை பொங்கியதை வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் நகைச்சுவையாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையை பார்த்து நேற்று மக்கள் பீதிக்குள்ளாகிவிட்டனர். அதாவது அலையோடு அலையாக நுரை பொங்கி பொங்கி நுரை தள்ளிக் கொண்டு இருந்தது.
அதிர்ச்சி
மேலும் கடல் நீரின் நிறமும் பழுப்பு நிறத்திலானது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தி வைரலானது. இதை பார்க்கவே கடற்கரைக்கு மக்கள் கூடினர்.
|
ஆய்வு செய்ய
இதுகுறித்து ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் சென்னை மெரினா கடற்கரையில் அலையில் அடித்து வரப்படும் நுரை: செய்தி - ஒருவேளை நடுக்கடலில் யாரோ துணி துவைத்து விட்டு, சோப்பு போட்டு குளிக்கிறார்கள் போலிருக்கிறது. ஆய்வு செய்ய நமது சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணனை உடனடியாக கடலுக்குள் அனுப்பி வைக்கவும்!என்று தெரிவித்துள்ளார்.
சாயக்கழிவுகள்
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சாயப்பட்டறை தொழிற்சாலைகள் இரவு நேரங்களில் சாயக்கழிவுகளை கொட்டுவதாக புகார்கள் எழுந்தன.
நுரை அல்ல
இந்நிலையில் சாயக்கழிவு காரணமாக நொய்யல் ஆற்றில் நுரை நுரையாக வந்தது. அப்போது இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறுகையில் இது சாயக்கழிகளால் ஏற்படும் நுரை அல்ல.
சோப்பு நுரை அல்ல
கோவை மற்றும் அதன் எல்லைக்குள்பட்ட வீடுகளில் பயன்படுத்தப்படும் சோப்பு மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளாலேயே ஏற்பட்டது என்று கூறி அனைவரையும் அதிர செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.