அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? TMB வங்கி மீது சைபர் கிரைமில் சென்னை டிரைவர் புகார்!
சென்னை: தவறுதலாக ரூ.9000 கோடி டெபாசிட் ஆனது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மீது டிரைவர் ராஜ்குமார் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். 9,000 கோடி ரூபாய் யார் பணம் என்று வங்கி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை, என் அனுமதி இன்றியே மீண்டும் எடுத்துவிட்டனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்காரப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்து, வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்த நிலையில், ராஜ்குமாரின் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக் கணக்கில் கடந்த 9ஆம் தேதியன்று திடீரென்று 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதுவரை அவரது வங்கிக் கணக்கில், இருந்தது வெறும் 15 ரூபாய் தான்.

திடீரென 9000 கோடி ரூபாய் தனது அக்கவுண்டில் டெபாசிட் ஆனதாக தனது செல்போனுக்கு குறுஞ்செய்தி வரவே, நண்பர்கள் யாரோ விளையாட்டாக அனுப்பியிருக்கலாம் அல்லது ஏதாவது எஸ்.எம்.எஸ் தவறுதலாக வந்திருக்கலாம் என அவர் நினைத்துள்ளார். பிறகு எதற்கும் பரிசோதித்துப் பார்க்கலாம் என நினைத்த ராஜ்குமார், தனது வங்கிக் கணக்கில் இருந்து 21,000 ரூபாயை நண்பருக்கு அனுப்பியுள்ளார். அந்த பணம் நண்பருக்கு சென்றதையடுத்து தனது வங்கிக் கணக்கில் பணம் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளையிலிருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டுள்ளனர். ராஜ்குமாரின் வங்கி கணக்குக்கு தவறுதலாக பணத்தை அனுப்பி விட்டதாகவும், அதனைப் பெற்றுக் கொள்வதாகவும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் உதவியுடன் வங்கி மற்றும் ராஜ்குமார் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது வங்கி தரப்பில் தவறுதலாக பணம் அக்கவுண்ட் மாறி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு இந்த தொகையை அனுப்பும் பணியில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தவறுதலாக கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் 9000 கோடியை செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ராஜ்குமார் நண்பருக்கு அனுப்பி செலவழித்த 21,000 ரூபாயை திரும்பத் தர வேண்டாம் என்றும், அவருக்கு கார் வாங்க கடன் வழங்குவதாகவும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு, மீண்டும் அந்த தொகையை வங்கி நிர்வாகம் பெற்றுக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தவறுதலாக ரூ.9000 கோடி தனது அக்கவுண்டில் டெபாசிட் ஆனது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார் டிரைவர் ராஜ்குமார். தனது அக்கவுண்டை வங்கி நிர்வாகம் தவறாகப் பயன்படுத்தியதாகவும்,தனக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்குமார், "ரூ.9000 கோடி எனது அக்கவுண்டில் க்ரெடிட் ஆனது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன். எனது அக்கவுண்டில் பணம் போட்டு எடுத்திருக்கிறார்கள். எனது அக்கவுண்டை தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதுதொடர்பாக வங்கியிடம் கேட்டதற்கு அவர்கள் எந்த விளக்கமும் தரவில்லை. எனவே இன்று புகார் அளித்துள்ளேன்.
நான் எடுத்த ரூ.21,000 பணம் பற்றித்தான் வங்கி நிர்வாகத்தினர் என்னிடம் பேசினார்கள். ரூ.9000 கோடி டெபாசிட் போட்டு, மீதி அதில் இருந்த பணத்தை எடுத்த பிறகு தான் எனக்கு வங்கியில் இருந்து இன்ஃபார்ம் செய்தார்கள். என்னுடைய அனுமதி இல்லாமலே என் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். இதுபற்றி கேட்கும்போது, இந்த விஷயம் வெளியே தெரிய வேண்டாம், போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்றார்கள்.
உண்மையில் எவ்வளவு தொகை எனது கணக்கில் வந்தது என்று கூட வங்கி என்னிடம் சொல்லவில்லை. வங்கியில் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றுதான் அக்கவுண்ட் ஓப்பன் செய்கிறோம். வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் அக்கவுண்டில் பணம் வருகிறது, போகிறது ஆனால், வங்கியே உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் வங்கியை எப்படி நம்புவது? அதனால் தான் புகார் அளித்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications