இன்று முதல் டிரைவிங் லைசன்ஸும், ஆர்.சி.புத்தகமும் ஸ்பீடு போஸ்டில் மட்டுமே அனுப்பப்படும்.. தமிழக அரசு
சென்னை: இன்று முதல் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சீட்டு ஆகியவை விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகனங்கள் பதிவு செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பொதுவாக ஓட்டுநர் உரிமங்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலோ அல்லது பகுதி அலுவலகங்களிலோ (யூனிட் ஆபிஸ்) எடுக்கப்பட்டு உடனுக்குடன் லைசன்ஸ் கொடுக்கப்பட்டுவிடும்.

அதே போல் இரு சக்கர வாகனம், 3 சக்கர வாகனம், 4 சக்கர வாகனம், பஸ், லாரி, டெம்போ, சரக்கு வாகனம் என எதுவாக இருந்தாலும் அவை பதிவு செய்யப்பட்டு அதற்கான பதிவுச் சான்று (ஆர்.சி. புத்தகம்) நேரடியாக விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும். இதற்கென பிரத்யேக பதிவு பராமரிக்கப்பட்டு அதில் கையெழுத்து பெற்று கொடுக்கப்படும்.
அது போல் ஒருவேளை ஒரு விண்ணப்பதாரருக்கு அவர் வசிக்கும் பகுதிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இருக்கிறது என்றால் அவர் டிரைவில் ஸ்கூலின் முகவரியை கொண்டு வேறு அலுவலகத்தில் பெறலாம். ஆர்சியிலும் லைசன்ஸிலும் முகவரி என்ற இடத்தில் டிரைவிங் ஸ்கூல் முகவரி இருக்கும்.
இந்த நிலையில் இன்று முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகம், பகுதி அலுவலகங்களில் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமமும் பதிவுச் சான்றும் விரைவு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக விண்ணப்பதாரர்கள் போன் எண்ணையும் முகவரியையும் சரியாக கொடுத்தல் அவசியம். ஒரு வேளை தவறான முகவரியையோ செல்போன் எண்ணையோ கொடுத்திருந்தால் இதற்கு விண்ணப்பதாரரே பொறுப்பு! விண்ணப்பதாரர் டிரைவிங் ஸ்கூல் முகவரியை பயன்படுத்தியிருந்தால் அவருடைய லைசன்ஸ், ஆர்.சி. புத்தகம் முடக்கப்படும்.
ஒரு வேளை லைசன்ஸ் அல்லது ஆர்.சி. புத்தகம் வீட்டுக்கு வரும் போது வீட்டில் விண்ணப்பதாரர் இல்லை என்றால் அவை திரும்பவும் ஆர்டிஓ அலுவலகத்திற்கே வந்துவிடும். நேரடியாக வந்து கேட்டாலும் கொடுக்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications