பார்ட்டியில் ’பவுடர்’.. 2 வாரம் கம்பி எண்ணிய ஸ்ரீகாந்த், கிருஷ்ணா! கோர்ட் ஆர்டர் கிடைச்சதுமே ரிலீஸ்
சென்னை: போதை பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்ட நிலையில் ஏறக்குறைய இரு வார சிறைவாசத்திற்கு பிறகு இருவரும் வெளியே வந்தனர். இன்று முதல் இருவரும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் வழக்கு தொடர்பாக பிரதீப் என்பவரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் பிரமுகர் ஆன பிரசாத் என்பவரிடம் போதைப் பொருள் வாங்கியதாக கூறினார்.
இதை அடுத்து பிரசாத்தை கைது செய்த நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பல திரைப்பட நடிகர்கள் போதைப்பொருள் வாங்கியதாக சொல்லப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு 40 முறை போதை பொருளை விற்றதாக கூறினார்.

இதை அடுத்து ஸ்ரீகாந்தை அழைத்து வந்த போலீசார் அவரது ரத்த மாதிரிகளை சோதனைக்காக அனுப்பினார். அதில் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும், போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த நடிகர்கள் யார் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதை அடுத்து கழுகு படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கிருஷ்ணா மீதும் போலீசாரின் பார்வை விழுந்தது.
அவர் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவராகவே விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக அவரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதர்கிடையே நுங்கம்பாக்கம் அசிஸ்டன்ட் கமிஷனர் முன்னிலையில் நடிகர் கிருஷ்ணா தனது வழக்கறிஞர்களுடன் ஆஜர் ஆனார். இதை அடுத்து கிருஷ்ணாவிடம் போலீசார் 15 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய நிலையில் அவரும் கைது செய்யப்பட்டார்.
நடிகர் கிருஷ்ணா விசாரணைக்கு வந்தபோது தனக்கு ஏராளமான உடல்நலக் கோளாறு இருப்பதாகவும், தான் போதைப் பொருள் பயன்படுத்த முடியாது என்பதற்கான மருத்துவ ஆதாரங்களை சமர்ப்பித்தார். இருந்த போதும் கிருஷ்ணாவின் செல்போனில் இருந்த ஆதாரங்களை வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து கிருஷ்ணாவுக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததாக கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், இரு நாட்கள் கழித்து 26 ஆம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என போதைப் பொருள் கடத்தல் சிறப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு கடந்த 8ஆம் தேதி நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, ஸ்ரீகாந்திடம் போதை பொருள் கைப்பற்றப்படவில்லை எனவும், கிருஷ்ணா மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நிரூபிக்கப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கிருஷ்ணா ஸ்ரீகாந்த் ஆகிய இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. விசாரணை அதிகாரி முன்பாக இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்றதும் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தரப்பு வழக்கறிஞர்கள் அந்த உத்தரவின் நகலை புழல் சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கினர். சிறை நடைமுறைகள் முடிமடைந்த நிலையில் 9ஆம் தேதி இருவரும் விடுவிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர்கள் விடுதலை ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications