போதைப்பொருள் வழக்கு.. வசமாக சிக்கும் நடிகர் ஸ்ரீகாந்த்.. என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு?
சென்னை: தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஸ்ரீகாந்த். ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.. இதில் ஆப்பிள் பெண்ணே நீ யாரோ என்ற பாடலின் மூலம் தமிழ் மக்களின் மனங்களை கவர்ந்தார். தொடர்ந்து மனசெல்லாம், போஸ், பம்பரக் கண்ணாலே, விஜய்யுடன் நண்பன் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் வழக்கில் கைது
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழக போலீசார் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 'கொகைன்' போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சேலம், சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். அப்போது அவருக்கு ஆப்பிரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜான் (38) என்பவர் கொகைன் போதைப்பொருளை சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஓசூரில் கைது செய்யப்பட்ட ஜானை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என்று விசாரித்தபோது, நடிகர் ஸ்ரீகாந்த் பெயரை அவர் கூறினார். இதன்பின்னர் நேற்று ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வர வைத்து விசாரணை செய்தனர். முதலில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதே இல்லை என்றார். இதனால் அவரது ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்யப்பட்டது.
என்னென்ன பிரிவுகளில் வழக்கு
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப் பொருள் எதுவும் சிக்கவில்லை. ஆனால் ரத்த மாதிரியை சோதித்ததில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் பயன்படுத்தி 45 நாட்கள் வரை மருத்துவ பரிசோதனையில் கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவர் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் முதல் எதிரியாக பிரதீப் குமார், 2-வது எதிரியாக ஜான் சேர்க்கப்பட்டுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் மீது தடை செய்யப்பட்ட போதைப்பொருளை தொடர்ந்து பயன்படுத்தியதுடன் அதை வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
12 மணி நேரம் விசாரணை
மேலும், வணிக ரீதியான அளவுக்கு உட்பட்டு போதைப்பொருள் கையில் வைத்திருப்பது தொடர்பான பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்ற செயலில் பங்கு பெறுபவர் என்ற போதைப்பொருள் தடுப்பு சடப்பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்திடம் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலீசார் இது தொடர்பாக கூறுகையில், "போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் ஆதாரத்துடன் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர். போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications