போதைப்பொருள் தடுப்பு.. 2 மாதங்களில் 470 குற்றவாளிகள் கைது.. தமிழ்நாடு போலீஸ் புள்ளி விபரம்
சென்னை: போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 470 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. கடத்தலில் ஈடுபட்ட 470 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 1,914 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 கிலோ மெத்தம்பேட்டமைன், 700 டேபன்டடால் உள்பட ரூ.2.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. திமுக அரசைக் கண்டித்து இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் போதைப்பொருள் தங்குதடையின்றி கிடைக்கிறது. போதைப்பொருளால் தமிழ்நாட்டின் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். போதைப்பொருளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது பற்றி பெற்றோர்கள் அஞ்சுவது போல நானும் அஞ்சுகிறேன்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுப்பது மோடியின் உத்தரவாதம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த பொதுக்கூட்டம் முடிந்து சில மணி நேரங்களில் தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், "போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மாநிலம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மற்றும் நடப்பு பிப்ரவரி மாதங்களில் போதைப்பொருள் மற்றும் மனமயக்கப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 18 பெண்கள் உட்பட மொத்தம் 470 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
1,914 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 கிலோ மெத்தம்பேட்டமைன், 700 டேபன்டடால் உள்பட ரூ.2.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். 17 இருசக்கர வாகனங்கள், 6 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கிய வழக்காக கடந்த 11.02.2024 அன்று சென்னை மாநகர் பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜிபான் பிஸ்வாஸ், (ஆ/வ 30,) பல்ராம் புஜாரி, (ஆ/வ 25) மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சாஷிகுமார், (ஆ/வ 32) ஆகிய மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 101 கி.கி. உலர் கஞ்சா மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 15.012024 அன்று மதுரை, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவினர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்த ராஜபாண்டி, (ஆ/வ 27, ) செல்வம் @ செல்வராஜ், (ஆ/வ 36) மற்றும் சிவப்பிரகாஷ், (ஆ/வ. 24) ஆகிய மூன்று குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 10 இலட்சம் மதிப்புள்ள 100 கி.கி. உலர் கஞ்சா மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 17 குற்றவாளிகள் பல்வேறு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மதுரை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவில் 22 கிலா கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவருக்கு 31.01.2024 அன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,00,000/- அபராதமும் விதிக்கப்பட்டது.
இதே போல் திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவில் 20 கி.கி கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் என்பருக்கு 07.02.2024 அன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,00,000/- அபராதமும் விதிக்கப்பட்டது. போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சட்ட அமலாக்கம் தவிர, மாணவர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த 53 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன. போதைப்பொருள் மற்றும் மனமயக்கபோதைப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா உதவி எண். 10581 மூலம், வாட்ஸ்அப் எண்.94984 10581 அல்லது மின்னஞ்சல் ஐடி [email protected] மூலமும் போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகலவல்களை தெரிவிக்கலாம்.
மதுவிற்பனை தொடர்பான குற்றங்கள் மற்றும் போதைப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை தொடர்பான புகார் மற்றும் தகவல்களைப் பகிர்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications