தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலையில்! இரு கார்கள் மோதி விபத்து! தந்தை, கர்ப்பிணி மகள் பலி
சென்னை: தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலை அனகாபுத்தூரில் மதுபோதையில் எதிர்திசையில் தவறாக வந்த கார் நேருக்கு நேர் மற்றொரு கார் மீது மோதிக் கொண்ட விபத்தில் தந்தையும், கர்ப்பிணி மகளும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. தாயும், டிரைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னை அனகாபுத்தூர் மதுரவாயல் புறவழிச்சாலையில் நேற்று இரவு, போரூரில் இருந்து தாம்பரம் நோக்கி வாடகை கார் மூலம் பத்மநாபன் என்பவர் அவருடைய மனைவி, கர்ப்பிணி மகளுடன் பயணம் செய்தார்.

காரை மணிகண்டன் என்ற டிரைவர் ஓட்டி வந்தார். மணிகண்டன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அப்போது அவர் என்ன செய்கிறோம் என தெரியாமல் எதிர்திசையில் தவறான பாதையில் காரை ஓட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது.
அப்போது அவ்வழியாக வந்த கார் மீது மணிகண்டன் ஓட்டி வந்த கார் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த பத்மநாபன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்.
அவரது மகள் 3 மாத கர்ப்பிணி தீபிகா (23), மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பத்மநாபனின் தாய் இந்திராணி (51), மற்றொரு கார் ஓட்டுநர் புவனேஷ் (21) காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்தை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவரை குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் கைது செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications