தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் பிளாஸ்டிக் தடை எதிரொலி.. வருது… வருது… மஞ்சப்பைகள்
Recommended Video

சென்னை: நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வர உள்ள நிலையில், துணிப்பைகள், மஞ்சப்பைகள் தயாரிக்கும் பணி சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ, இருப்பு வைப்பதற்கோ தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு ஒரு முயற்சியாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடக்கம் முதலே தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு எச்சரித்து வந்த போதிலும் அதன் பயன்பாடு குறையவில்லை. குறிப்பாக சாலையோர கடைகள், பழக்கடைகள், ஓட்டல்களில் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாடு
மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி, பறிமுதல் செய்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை. இதையடுத்து, 50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ, இருப்பு வைப்பதற்கோ தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படும்
அதன்படி வரும் ஜனவரி 1 முதல், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்றாலோ, இருப்பு வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் செய்தால், தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். உரிமம் இன்றி கடை நடத்தினால், சீல் வைக்கப்படும்.

அபராதம் விதிக்க முடிவு
வியாபாரிகளுக்கு மட்டும் அல்ல, பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் பட்சத்தில், அபராதம் விதிக்கப்படும். நாளை முதல் அமுலுக்கு வரும் தடை உத்தரவு, பொதுமக்களை மீண்டும் மஞ்சப்பை எனும் துணிப்பை பக்கம் திரும்ப வைத்துள்ளது.

மஞ்சப்பை தயாரிப்பு
தடை உத்தரவு தீவிரமாக பின்பற்றப்படும் என்ற நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் துணிப்பைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தையல் கலைஞர்களிடம் இருந்து துணிப்பைகளை மொத்த வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்று வருகின்றனர். மக்களால் மறந்தேவிட்ட மஞ்சப்பை தற்போது மீண்டும் வர தொடங்க உள்ளது.












Click it and Unblock the Notifications