மூச்சு முட்டுதே.. தமிழ்நாடு முழுவதும் மோசமான காற்று மாசு! சென்னை உள்ளிட்ட நகரங்களில் அபாய நிலை
சென்னை: தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் காற்று மாசு கடுமையான அளவில் மோசமடைந்து உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசு காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது.

இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மாசு பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ள நிலையில் இதுபோன்ற கட்டுப்பாட்டை அரசு கடந்த சில ஆண்டுகளாக விதித்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று உற்சாகமாக தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை வரவேற்க தொடங்கிவிட்டனர்.
அதிக அளவிலான பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்றே காற்று மாசு கடுமையாக அதிகரித்து இருந்தது பலரை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கி உள்ளதால் காற்று மாசு கடுமையாக அதிகரித்து. குறிப்பாக நேற்று இரவு தொடங்கி தற்போது வரை விடிய விடிய பட்டாசுகளை மக்கள் வெடித்து தள்ளி வருகிறார்கள்.
இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுமாசு தரக்குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகியுள்ளது. சென்னையில் காற்றின் தரம் மிதமான மாசு என்ற நிலைக்குச் சென்று இருக்கிறது. சென்னை பெருங்குடியில் - 178, அரும்பாக்கம் - 159, மணலி - 152,
ராயபுரம் - 115, கொடுங்கையூர் - 112, ஆலந்தூர் - 102 என அதிகரித்து இருக்கிறது. கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு தரக் குறியீடு 231 ஆக அதிகரித்து உள்ளது. சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலும் காற்று மாசு மோசமடைந்து இருக்கிறது.
கடலூர் - 155, வேலூர் - 122, சேலம் - 122, புதுச்சேரி - 147 என்ற அளவில் காற்று மாசு தரக் குறியீடு உயர்ந்து இருக்கிறது. காற்று மாசு அளவு அதிகரித்து உள்ளதால் ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம் எனவும், இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்து உள்ளது.












Click it and Unblock the Notifications