பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் மக்கள்.. திணறும் சென்னை.. கடும் போக்குவரத்து நெரிசல்.. எங்கு தெரியுமா?
சென்னை: சென்னையில் தாம்பரம், கிண்டி உட்பட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 1 மணி நேரமாக வாகனங்கள் எங்கும் நகர முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் பொங்கலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. வரும் செவ்வாய் அன்று போகி பண்டிகை துவங்கி 4 நாட்கள் மக்கள் பொங்கலை கொண்டாட இருக்கிறார்கள். தமிழக அரசு சார்பாக இந்த பொங்கலுக்காக கூடுதலாக 29,213 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கும், பிற நகரங்களிலிருந்தும் 29,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது இல்லாமல் தனியார் பேருந்துகள் நிறைய இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மட்டும் 4,950 அரசு சிறப்புப் பேருந்துகள் பல நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளன.
அதேபோல் சென்னையில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் நீண்ட விடுமுறை அளித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக பலர் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். முக்கிய பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதி கொடுத்துள்ளது. இதனால் தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, கோவை, மதுரை, குமரி என்று பல மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள்.
ஆகவே தற்போது சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிண்டி தொடங்கி பெருங்களத்தூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம் குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் போரூர், வளசரவாக்கம், அய்யப்பன்தாங்கல், பூவிருந்தமல்லி ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு இன்னும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றே இரவு சென்னையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் நிலவியது. தற்போது இந்த நெரிசல் இன்னும் அதிகமாகியுள்ளது. 6 மணிக்கு பிறகு அலுவலகம் முடிந்த பின் இன்னும் நெரிசல் அதிகரிக்கும். இதனால் வாகன ஓட்டிகள் பொதுவான பாதையை தவிர்த்து மாற்று பாதையை பயன்படுத்த அறிவுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications