மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இந்த மாவட்டங்களில்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வியாழக்கிழமை (நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மூன்று மாவட்டங்களுக்குப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகச் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் தொடர்ந்து கொட்டித்தீர்க்கும் கனமழையால் தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ. 18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமை (நவ. 18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
அதேபோல மாநிலத்தில் உள்ள 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி மாவட்டங்களில் வியாழக்கிழமை (நவ. 15) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லையில் கடந்த மூன்று மணி நேரமாகக் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் நெல்லை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவிற்குத் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கனமழை
சென்னைக்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை மாலை முதலே நகரில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்யத் தொடங்கிவிட்டது. நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி, பாரிமுனை, கொளத்தூர், புதுப்பேட்டை, சூளைமேடு, கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. நகர்ப் பகுதிகளில் மட்டுமின்றி சென்னை புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், தரமணி, ஆதம்பாக்கம், ஆவடி, சோழிங்கநல்லூர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

ரெட் அலர்ட்
நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை மக்கள் 2 நாட்களுக்குத் தேவையான குடிநீர், பால், உணவுப் பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், மழை தொடர்பான புகார் மற்றும் உதவிகளுக்கு 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications