சென்னைக்கு ஆபத்து.. அடுத்த 5 ஆண்டில் 29 சதவீத பகுதி கடலில் மூழ்கும்.. பதறவைக்கும் பரபர அறிக்கை
சென்னை: சென்னையில் உயர்ந்து வரும் கடல்மட்டத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் நகரின் 29 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை தடுக்க விரைவாக திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் முதன்மையானதாக காலநிலை மாற்றம் மாறியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் பல முக்கிய நகரங்கள் எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. உயர்ந்து வரும் கடல் மட்டம், அதிகரித்து வரும் வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றால் இந்தியாவிலும் பல்வேறு முக்கிய நகரங்கள் பாதிக்கப்படலாம் என பல்வேறு அறிஞர்கள் கூறியுள்ளனர்.

சென்னை மாநகராட்சி அறிக்கை
இதனால் அனைத்து பெருநகரங்களும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபடும் வகையிலான காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கையை தயாரித்து அதன்படி செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை பாதுகாப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் காலநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கை என்பது சென்னை நகரை காலநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை செய்ய துண்டும் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

7 சென்டிமீட்டர் உயரும் கடல்மட்டம்
இருப்பினும் இந்த அறிக்கையில் பல்வேறு திடுக்கிட வைக்கும் தகவல்கள் உள்ளன. அதாவது சென்னையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளில் கடல் மட்டம் 7 செ.மீ உயரக்கூடும். அவ்வாறு உயர்ந்தால் கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் கடலில் மூழ்கக் கூடும். சென்னையில் கடல் மட்டம் உயர்ந்து வரும் நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் அடுத்த 5 ஆண்டுகளில் 29 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம் என கூறப்பட்டுள்ளது.

100 ஆண்டில் 68 சதவீத பகுதிகள்
மேலும் கணிக்கப்பட்ட வெள்ள அபாயங்களின்படி இது 100 ஆண்டுகளில் 56.5 சதவீத பகுதிகளை பாதிக்கும். அடுத்த 100 ஆண்டுகளில் 68 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை சந்திக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த காலக்கட்டத்தில் சென்னை போக்குவரத்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், புறநகர் ரயில் நிலையங்களின் 45 சதவீத அடிப்படை கட்டமைப்புகள் பாதிக்கப்படும்.

10 லட்சம் மக்கள் பாதிப்பு
தமிழகத்தில் மக்கள் தொகை அடர்த்தியானது பிற இடங்களை ஒப்பிடும்போது சென்னையில் 2 மடங்கு அதிகமாக உள்ளதால் இது மிகவும் முக்கிய பிரச்சனையாகும். மேலும் கடல் மட்டம் உயர்வதால் 2100ம் ஆண்டில் 16 சதவீத பகுதி அதாவது சென்னையில் 67 சதுர கிலோமீட்டர் பரப்பு முழுமையாக நீரில் மூழ்கும் எனவும், இதனால் சுமார் 215 குடிசை பகுதிகள் உள்பட குடியிருப்புகளில் வசிப்பவர்கள் என மொத்தம் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம்
சென்னையில் 2018-19ம் ஆண்டுக்கான பசுமை இல்ல வாயு வெளியேற்றம் என்பது குடியிருப்பு கட்டடங்களில் இருந்து 31 சதவீதமாக உள்ளது. வணிகம் மற்றும் நிறுவனங்களின் கட்டடங்களை பொறுத்தமட்டில் 26 தவீதம் என்ற அளவில் இருந்தது. உற்பத்தி மற்றும் கட்டுமான தொழில்கள் 11 சதவீதம் என்ற அளவிலும், எரிசக்தித் தொழில்கள் 2 சதவீதம் அளவுக்கு பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் பங்களித்தன. குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் சேர்த்து மொத்தம் 70 சதவீத அளவுக்கு பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை கொண்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராமதாஸ் வலியுறுத்தல்
இதுபற்றி பூவுலகின் நண்பர்கள் குழுவின் ஜி சுந்தர்ராஜன் கூறுகையில், ‛‛அறிக்கையில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்களில் இருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு குறிப்பிடப்பட்டு உள்ளது. இருப்பினும் அதனை கட்டுப்படுத்தும் விஷயங்கள் அறிக்கையில் இடம்பெறவில்லை. மேலும் பரந்தூர் விமான நிலையம் உள்பட அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அது சுற்றுச்சூழலுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்'' என்றார். இதேபோல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் அரசு திட்டங்கள் தீட்டி விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications