கசிந்த வினாக்கள்? குரூப் 2 மெயின் தேர்வில் குழப்பம்.. விடைகளை கேட்டு எழுதிய தேர்வர்கள்? பரபர புகார்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ மெயின் தேர்வு இன்று நடைபெறுகிறது. பல மையங்களில் வினாத்தாள்களின் பதிவெண்கள் மாறியிருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இந்த குளறுபடியால் தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் தேர்வுக்கு முன்பே வினாக்கள் கசிந்ததாகவும், குளறுபடியை சரிசெய்யும் சமயத்தில் தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்த சில தேர்வர்கள் வினாக்களுக்கான விடைகளை செல்போன் மூலம் மற்றவர்களிடம் கேட்டும், கூகுளில் தேடியும் படித்து தெரிந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மாற்று தேதியில் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுக்கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கான முதல்நிலை தேர்வு 2022 மே 21ல் நடந்தது. நவம்பர் 8ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் 55,071 பட்டதாரிகள் பாஸ் ஆகினர்.

இன்று மெயின் தேர்வு
இந்த 55,071 பட்டதாரிகளுக்கு அடுத்தகட்ட மெயின் தேர்வு எழுத வேண்டும். இவர்களுக்கான மெயின் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், மதியம் பொதுத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. . சென்னை உள்பட தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் தேர்வர்கள் இன்று தேர்வு எழுதினர். காலை 9.30 மணிக்கு தேர்வு துவங்கி 12.30 மணி வரை நடைபெற்றது.

பதிவெண்ணால் குழப்பம்
இந்த வேளையில் தமிழ்நாட்டில் சில தேர்வு மையங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. வினாத்தாளில் உள்ள பதிவெண்கள் மாறி மாறி இருந்துள்ளன. இதனால் காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு தாமதமானது. ஒரு சில மையங்களில் இந்த சிக்கல் உடனடியாக சரிசெய்யப்பட்டு தேர்வு தொடங்கப்பட்டுள்ள நிலையில், சில மையங்களில் மாறியிருக்கும் பதிவு எண்களைச் சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் டிஎன்பிஎஸ்சி சார்பில், ‛‛தாமதத்துக்கு ஏற்ப கூடுதல் நேரம் தேர்வு எழுத வழங்கப்படும்'' என தெரிவித்தது. அதன்பிறகு குளறுபடி சரிசெய்யப்பட்டு தமிழ் மொழி தகுதி தாளுக்கான தேர்வு நடந்தது.

திரும்ப பெறப்பட்ட வினாத்தாள்
இந்நிலையில் தான் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான வினாக்கள் முன்கூட்டியே வெளியாகி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதாவது தேர்வுக்கான வினாத்தாள், விடைத்தாள் ஆகியவற்றில் ஏற்பட்ட பதிவெண் குளறுபடியால் அவற்றை தேர்வறை கண்காணிப்பாளர்கள் திரும்ப பெற்றனர். ஆனால் அதற்குள் பலரும் அந்த வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் கேள்விகளை பார்த்துவிட்டனர். மேலும் குளறுபடியை சரிசெய்யும் வேளையில் தேர்வறையை விட்டு பலரும் வெளியே வந்து விடைகளை அறிந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

செல்போன் மூலம் விடைகள் தேடல்
இவர்கள் தாங்கள் கொண்டு சென்ற புத்தகம் மற்றும் தேர்வறைகளுக்கு வெளியே நிற்கும் குடும்பத்தினரிடம் இருக்கும் செல்போன்களை பெற்று கூகுளில் தேடி அந்த கேள்விகளுக்கான விடைகளை படித்து தெரிந்து கொண்டு மீண்டும் தேர்வறை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இன்னும் சிலர் தாங்கள் பயிலும் கோச்சிங் சென்டரையும், நண்பர்களையும் தொடர்பு கொண்டு கேள்விகளுக்கான விடைகளை அறிந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது இந்த தேர்வை ரத்து செய்து மாற்று தேதியில் புதிய வினாத்தாள்களுடன் தேர்வு நடத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

வினாத்தாள் வெளியானதாக கூறிய அன்புமணி
இதுபற்றி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கி உள்ளது. பலதேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்தது தான் இக்குழப்பத்துக்கு காரணமாகும். பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவெண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு. பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகிவிட்டது. டிஎன்பிஎஸ்சியின் அலட்சியமே இதற்கு காரணமாகும்.

மாற்று தேதியில் தேர்வு
போட்டித்தேர்வுகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மனஉளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சமவாய்ப்பும் இல்லை, மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை. சமவாய்ப்ப்பள்ளி சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது. எனவே இன்றை எனவே இன்றைய தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு அனைத்து குளறுபடிகளையும் களைந்துவிட்டு வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இத்தேர்வை டிஎன்பிஎஸ்சி மீண்டும் நடத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications