ஜெயக்குமாருக்கு ஒரே தமாசு.. கையை பிடிச்சாலும் வரமாட்டாங்க.. கண்ணடிச்சாலும் வரமாட்டாங்க: துரைமுருகன்
சென்னை: கையை பிடித்து இழுத்தாலே வராதவர்கள், கண் அடித்தால் வந்துவிடுவார்களா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சு பற்றி கூறியுள்ளார் திமுக அமைச்சர் துரைமுருகன்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன. அதிமுக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுகவை பொறுத்தவரை 4 கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டது. காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு, அதன் பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். வேட்பாளர் தேர்வுக்கான பணிகளிலும் கட்சி தலைமைகள் ஈடுபட்டு வருகின்றன.
கதிர் ஆனந்த் விருப்ப மனு: வேலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுக சார்பில் விருப்பமனு அளித்தார் அமைச்சர் துரைமுருகனின் மகனும் சிட்டிங் எம்.பியுமான கதிர் ஆனந்த். அவருடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார் அமைச்சர் துரைமுருகன். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி அழைப்பு விடுத்து, அதிமுகவின் கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாகவும் கூட்டணிக்கு வந்தால் அதிக சீட் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஜெயக்குமார் தமாசா பேசுவார்: அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "திமுக கூட்டணியில் உள்ளவர்கள் கையைப் பிடித்து இழுத்தாலும் அதிமுக கூட்டணிக்கு வரமாட்டார்கள். கையை பிடித்து இழுத்தாலே வராதவர்கள், கண் அடித்தால் வந்துவிடுவார்களா? என்கிற திரைப்பட வசனம் தான் இதை பார்க்கும் போது தோன்றுகிறது. ஜெயக்குமார் எதையாவது தமாஷாக பேசுவார்" என்று கூறினார் .
மேலும் பேசிய துரைமுருகன், "கூட்டணி கட்சிகளுக்கும் சில வேலைகள் இருக்கும். அதில் கவனம் செலுத்துவார்கள். திமுக கூட்டணியில் எந்த பாதகமும் இல்லை. விரைவில் கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையும்." எனத் தெரிவித்தார்.
மேலும், வெள்ளப் பாதிப்பு தொடர்பான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், "வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்களுக்கு தான் அதை பற்றி பேச உரிமை இருக்கிறது. வானத்தில் பறந்து வந்து கூட பார்க்காதவர்களுக்கு அதைப் பற்றி பேச உரிமை இல்லை." என்றார்.












Click it and Unblock the Notifications