மு.க.ஸ்டாலின், துரைமுருகன் இடையே லடாய்?
Recommended Video
சென்னை: திமுக தலைமைக்கும், கட்சிப் பொருளாளர் துரைமுருகனுக்கும் இடையே லடாய் என்று தகவல்கள் கூறுகின்றன.
வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட பிறகு ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் இடையே பனிப்போர் நிலவி வருவதாகவும் விரைவில் அவரிடம் இருந்து பொருளாளர் பதவி பறிக்கப்படலாம் என்றும் திமுக புள்ளிகள் கூறுகின்றனர்.
வேலூர் தொகுதியை தன் மகன் கதிர் ஆனந்துக்காக கடந்த சில ஆண்டுகளாகவே போராடி பெற்றார் துரைமுருகன். கடந்த 2014 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதி தனது மகனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த சூழலில் அது இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் துரைமுருகன் வருத்தத்தில் இருந்தார். அதன் பின்னரும் நீண்ட போராட்டத்திற்கு பின்னரே இந்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியை பெற்றார்.
இதன் பின்னர் வேலூர் தொகுதியில் பணம் பெருமளவு பாய்கிறது என்று கூறி வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இதனையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இது திமுக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒருபுறம் என்றால் துரைமுருகனால் திமுகவுக்கு பெரும் கெட்டபெயர் ஏற்பட்டு விட்டது என்று திமுக தலைமை கருதுகிறதாம். ரெய்டு குறித்து ஸ்டாலின் பொதுவெளியில் கண்டனம் தெரிவித்தாலும் அதன் பின்னர் துரைமுருகனிடம் தொடர்ந்து நன்றாக பேசுவதில்லை என்று தெரிகிறது. துரைமுருகனிடமும் ஸ்டாலின் இது குறித்து பேசவில்லை என்று திமுக சீனியர்கள் கூறுகின்றனர்.
அதோடு வேலூர் தொகுதியை குறிவைத்து ரெய்டு நடக்கப் போகும் தகவல் குறித்து ஸ்டாலினின் முக்கிய தளகர்த்தர் ஒருவர் துரைமுருகனுக்கு உங்கள் தொகுதியை குறிவைத்து ரெய்டு நடக்கப் போகிறது எச்சரிக்கையாக இருங்கள் என்று தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலும் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தொடர்ந்து ரெய்டு குறித்து மீடியாக்களிடம் எதுவும் பேசவேண்டாம் என்றும் மீடியாக்கள் வந்து கேட்டாலும் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறும் என்று மட்டும் கூறினால் போதும் என்றும் ஸ்டாலின் தரப்பில் அறிவுறுத்தப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் இடைவெளி அதிகரித்து கொண்டே சென்றுள்ளது. இதன் பிறகு ஸ்டாலின் குடும்பத்தினரும் ரெய்டு குறித்தும் துரைமுருகனின் நடவடிக்கைகள் குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அமமுக கட்சி அல்ல.. அதிமுகவை விட்டு சென்ற சனி.. ஓபிஎஸ் விமர்சனம்
இதன்பின்னர் துரைமுருகன் வீட்டில் தனி ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாகவும் திமுக தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற தகவல்களை அடுத்து ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் இடையிலான பனிப்போர் அதிகரித்துக்கொண்டே செல்வதாக கூறுகிறார்கள் அறிவாலயம் வட்டாரத்தினர். இதனையடுத்து துரைமுருகனிடம் இருக்கு பொருளாளர் பதவியை பறிக்கலாம் என்று ஸ்டாலினிக்கு சிலர் ஆலோசனை கொடுத்துள்ளனர். ஆனால் ஸ்டாலினுக்கு பதவி பறிப்பு தொடர்பாக அவரிடம் பேச தயக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொருளாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று ஏற்கனவே எ.வ.வேலு எதிர்பார்த்திருந்த நிலையில்தான் அது துரைமுருகனிடம் வழங்கப்பட்டது. இப்போது எ.வ.வேலு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக உடன்பிறப்புகள் தெரிவிகின்றனர்.
கட்சியின் மிக மூத்த தலைவரும் வன்னியர் சமூகத்தின் மிகப்பெரும் சக்தியாகவும் திகழும் துரைமுருகனிடம் இருந்து பதவியை பறிப்பது சாதி ரீதியாக திமுகவுக்கு இழப்பு ஏற்படலாம் என்றும் திமுக தலைமை கருதுவதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே அவர்மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமை தயங்கி வருகிறது. அதே வேளையில் தேர்தலில் திமுக எதிர்நோக்கும் வெற்றியை பெற்றால் ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார் என்று தெரிகிறது. அந்த நடவடிக்கையில் பலரது பதவி பறிபோகும் என்று கூறப்படுகிறது. இதில் துரைமுருகனின் பதவியும் பறிபோகும் என்று கூறப்படுகிறது.
ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் பனிப்போர் பெரும்போராக வெடிப்பதும், பொசுங்கி போவதும் தேர்தல் முடிவுகளை பொறுத்து அமையும் என்றே தெரிகிறது.