சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
துர்கா ஸ்டாலின் சகோதரி உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் உடன்பிறந்த சகோதரி சாருமதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
சகோதரியின் மறைவுச் செய்தியறிந்து துடிதுடித்துப் போன துர்காவுக்கு அவரது கணவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் ஆறுதல் சொல்லி தேற்றியிருக்கிறார்.
தனது சகோதரிகள் இருவர் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் துர்கா ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

துர்கா ஸ்டாலின் சகோதரி
முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி, ராஜமூர்த்தி என இரண்டு சகோதரிகள் ஒரு சகோதரர் உள்ளனர். தனது சகோதரர் மீதும் சகோதரிகள் இருவர் மீதும் துர்கா ஸ்டாலின் அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர். வெளியூர்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு செல்லும் போது தன்னுடன் எப்போதும் தனது இரண்டு சகோதரிகளில் ஒருவரையாவது உடன் அழைத்துச் செல்வார் துர்கா ஸ்டாலின்.

அன்பும் பாசமும்
யாருக்காகவும் எப்போதும் தனது சகோதரிகளை விட்டுக் கொடுக்காதவர் துர்கா ஸ்டாலின். இளம் வயதிலேயே தாயை இழந்ததால் ஒருவருக்கு ஒருவர் அன்புடனும் அதீத பாசத்துடனும் வளர்ந்தவர்கள் இவர்கள். இதனிடையே துர்கா ஸ்டாலினின் மூத்த சகோதரி சாருமதி கோவையில் திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டாலும் அவர் சென்னைக்கு குடிபெயர்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இவரது கணவர் தொழிலதிபராக இருந்து வருகிறார்.

குடும்பத்தினர் ஆறுதல்
இதனிடையே கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட வந்த சாருமதி, இன்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுச் செய்தியை அறிந்தவுடன் துர்கா ஸ்டாலின் துடிதுடித்துப் போய் கதறி அழுதிருக்கிறார். இதையடுத்து துர்கா ஸ்டாலினை அவரது கணவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆறுதல் படுத்தி தேற்றியிருக்கின்றனர்.

முக்கியப் பிரமுகர்கள்
துர்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதியின் இறுதிச் சடங்கு சென்னையில் இன்று நடைபெறுகிறது. முன்னதாக துர்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதி உடலுக்கு முக்கியப் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications