பதவி உயர்வுக்கு லஞ்சம்! துணை ஆணையர் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு! ரூ.35 லட்சம் பறிமுதல்
சென்னை: சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நடத்திய சோதனையில் பல லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கட்டடத்தில் தான் போக்குவரத்துத் துறை ஆணையரக அலுவலகம் உள்ளது. இங்கு தான் இணை ஆணையரக மற்றும் துணை ஆணையரக அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் என்பவரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பதவி உயர்விற்காக லஞ்சம் பெறப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சுமார் ரூ.35 லட்சம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவி்துதள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மாவட்டம், துணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில், நடராஜன், துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் 30 உதவியாளர்களிடமிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் லஞ்சம் பெறுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இன்று 14.03.2022. சென்னை நகரச் சிறப்புப் பிரிவு-3 ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அதிகாரிகள் மற்றும் துணை ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து, சென்னை எழிலகத்தில் உள்ள துணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.35 லட்சம் கைப்பற்றப்பட்டது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications