மாஜிக்களை தொடர்ந்து.. மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கும் செக்.. உள்ளே புகுந்த விஜிலன்ஸ்.. ரெய்டு
சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலமின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு இடங்களில் ரெய்டுகள் நடந்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி பதவி ஏற்றதில் இருந்து முந்தைய ஆட்சியில் ஊழல் புகாரில் சிக்கியவர்களையும், முறைகேட்டு புகாரில் சிக்கியவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைக்க தொடங்கி உள்ளது.
முக்கியமாக மாஜி அமைச்சர்கள் பலர் வரிசையாக விசாரணை வளையத்தில் சிக்கி வருகிறார்கள். முதலில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது வழக்கும் பதியப்பட்டது.

மாஜி அமைச்சர்கள்
அதன்பின்பாக வரிசையாக எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தது. இந்த தொடர் ரெய்டுகளால் அதிமுக தரப்பு கொஞ்சம் அதிர்ச்சியில்தான் இருக்கிறது. அடுத்து எங்கே ரெய்டு நடக்கும் என்றே கேள்வியும், எதிர்பார்ப்பும் அதிமுக தரப்பில் கேட்க தொடங்கி உள்ளது. பெரிதாக அதிகாரிகள் யாரும் இந்த ரெய்டில் இதுவரை சிக்கவில்லை.

லஞ்சம்
இந்த நிலையில்தான் தற்போது முக்கியமான அதிகாரி ஒருவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலமின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், லஞ்சம் வாங்கியதாகவும் புகார் வைக்கப்பட்ட நிலையில் அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வனத்துறை
ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாச்சலம் 2019ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். அதில் இருந்து இவர் இந்த பொறுப்பில் வசித்து வருகிறார். மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை பயன்படுத்திக்கொண்டு இவர் பல்வேறு நிறுவனங்களுக்கு, திட்டங்களுக்கு முறைகேடாக என்ஓசி வழங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன . லஞ்சம் வாங்கிக்கொண்டு என்ஓசி வழங்கியதாக இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிண்டி
சென்னை கிண்டியிலுள்ள அலுவலகம் மற்றும் வேளச்சேரியிலுள்ள வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அம்பத்தூரில் என்ஜிஓ ஒன்று தொடங்கி அதற்கு லஞ்ச பணத்தை தொண்டு நிதியாக வழங்க கூறி அதன்மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வழங்கியதாக இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சொந்தமான மொத்தம் 11 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications