வந்தாரை வாழ வைக்கும் சென்னை.. இ-பாஸ் தளர்வு.. வெறும் 10 நாளில்.. தலைநகர் திரும்பிய 3.5 லட்சம் பேர்!
சென்னை: இ பாஸ் விதிகளில் தளர்வு கொண்டு வரப்பட்ட நிலையில், சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 10 நாட்களில் நினைத்து பார்க்க முடியாத எண்ணிக்கையில் சென்னைக்கு மக்கள் வந்து இருக்கிறார்கள்.
கொரோனா காரணமாக, போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் இ பாஸ் முறை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் தமிழகத்தில் இ பாஸ் பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது. இதில் கடுமையான விதிகள் அமலில் இருந்தது. இதனால் இ பாஸ் பெறுவது தமிழகத்தில் குதிரை கொம்பாக இருந்தது.

சென்னை முடங்கியது
இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்றால் சென்னைதான். லாக்டவுன் தொடக்கத்தில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. சென்னையின் உற்பத்தி துறை தொடங்கி பல பணிகள் இதனால் பாதிக்கப்பட்டது. சென்னையில் பணியாற்றிய பலர் தங்கள் சொந்த ஊர்களில் முடங்கினார்கள்.

மாற்றம்
இதையடுத்து மக்களின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து இ பாஸ் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இ பாஸ் யார் விண்ணப்பித்தாலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பலரும் இ பாஸ் பெற விண்ணப்பித்தனர். இ பாஸ் விண்ணப்பம் செய்த எல்லோருக்கும் உடனுக்குடன் இ பாஸ் கிடைத்தது. இதனால் போக்குவரத்து இயல்புநிலைக்கு திரும்பியது.

மீண்டு வந்தனர்
இந்த நிலையில் சென்னைக்கு கடந்த 10 நாட்களில் 3.5 லட்சம் பேர் வந்து இருக்கிறார்கள். தினமும் சராசரியாக 30 ஆயிரம் முதல் 35000 பேர் வரை சென்னைக்கு வருகிறார்கள். முறையாக பாஸ் விண்ணப்பித்து இவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். இதனால் இந்த எண்ணிக்கையை எளிதாக கணக்கிட முடிகிறது. தென் மாவட்டங்களில் இருந்துதான் இப்படி அதிகமான பேர் சென்னைக்கு வருகிறார்கள்.

கேஸ்கள் அதிகம்
இதனால் சென்னையில் தற்போது மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 1000க்கும் குறைவாக கேஸ்கள் வந்த நிலையில் மீண்டும் 1200க்கும் அதிகமாக கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. சென்னையில் இப்படி கேஸ்கள் அதிகரிக்க இதுதான் காரணம் என்கிறார்கள். ஆனால் இதற்கு சென்னை மாநகராட்சி தயாராக இருந்துள்ளது. சென்னைக்கு வரும் நபர்களை முறையாக கண்காணிக்க சென்னை மாநகராட்சி முறையான திட்டங்களை வகுத்து இருக்கிறது.

பலர் வருகை
தமிழகத்தில் தற்போது இ பாஸ் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டத்தை குறைக்க முடியாது. தினமும் பல்லாயிரம் பேர் போக்குவரத்து மேற்கொள்வார்கள். இதை தடுக்க முடியாது. வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் நபர்களை முடிந்த அளவு கண்காணித்து சோதனை செய்ய வேண்டும். இதற்கான திட்டங்களை வகுத்து மாநகராட்சி செயல்பட்டு வருகிரியாது. அறிகுறி உள்ளவர்களை சோதனை செய்து சென்னை மாநகராட்சி அவர்களை தனிமைப்படுத்துகிறது .

மீண்டும் வருகிறது
சென்னைக்கு வரும் நபர்கள் கொரோனா அறிகுறி இருந்தால் உடனே தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறார்கள். இதனால் முடிந்த அளவு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் சென்னையில் பொருளாதார ரீதியான செயல்பாடுகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நிறுவனங்கள், அலுவலகங்கள் மீண்டும் குறைந்த பணியாளர்களுடன் செயல்பட தொடங்கி உள்ளது. இதனால் சென்னை விரைவில் மொத்தமாக மீண்டு எழும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications