கேரளாவிலிருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்.. கோவை மாநகராட்சி அதிரடி முடிவு.. கண்காணிப்பு தீவிரம்
சென்னை: கேரளாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஜிகா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவிலிருந்து கோவை மாவட்டத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இ பாஸ்வைத்திருக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா 2ஆம் அலை அதிகரிக்கத் தொடங்கியது. வெறும் சில வாரங்களிலேயே மாநிலத்தில் இரண்டாம் அலை உச்சத்தைத் தொட்டது.
தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது. இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் மே மாதம் முதலில் இரண்டு வாரங்கள் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

கொரோனா பாதிப்பு
அதன் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வந்தது. இருந்தாலும்கூட கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வர அதிக காலம் ஆனது. இதனால் இந்த மாவட்டங்களில் தளர்வுகள் கூட தாமதமாகவே அறிவிக்கப்பட்டன. இப்போது கிட்டதட்ட 2ஆம் அலை முழுவதுமாக கட்டுக்குள் வந்துள்ளதால், பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேரளா
அதேநேரம் அண்டை மாநிலமாகக் கேரளாவில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பாக, தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்துள்ள பாலக்காடு மாவட்டத்தில்தான் அங்கு வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அந்த மாவட்டத்திற்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜிகா வைரஸ்
இது மட்டுமின்றி கடந்த சில வாரங்களாக ஜிகா வைரஸ் பாதிப்பும் கேரளாவில் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இன்று வரை மொத்தம் 23 பேருக்குக் கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஜிகா வைரஸ் அச்சம் காரணமாகக் கேரளாவிலிருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளைக் கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இ பாஸ் கட்டாயம்
அதன்படி கேரளாவிலிருந்து வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் மற்றும் இபாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வழித்தடங்களில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இ பாஸ் இல்லாமல் வருபவர்கள் எல்லையிலேயே திரும்பி அனுப்பப்படுகின்றனர்.

மக்கள் கோரிக்கை
இருப்பினும், இந்த உத்தரவால் தமிழக எல்லையில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் கேரள மக்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இதனால் எல்லையில் அமைந்துள்ள ஊர்களில் வசிப்பவர்களுக்கும், பணி நிமித்தமாகத் தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கும் மட்டும் இ பாஸ் முறையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications