5 சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும்! மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்த எ.வ.வேலு!
சென்னை: தமிழகத்தில் பரனூர், வானகரம் உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைப் பகுதிக்குள் வரும் அனைத்து சுங்கச்சாவடிகளையும் மூட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோல் சென்னை முதல் செங்கல்பட்டு வரையிலான 8 வழிச்சாலை தடத்தை திண்டிவனம் வரை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.

டெல்லியில் சந்திப்பு
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு டெல்லியில் நேரில் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் அடங்கிய கோரிக்கை பட்டியலை அளித்தார். மேலும், தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலை திட்டப்பணிகள் குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்தனர்.

என்னென்ன கோரிக்கைகள்
அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான சாலையை 8 வழித்தடமாக அகலப்படுத்த வேண்டும், திருச்சி -துவாக்குடி இடையே உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும், தாம்பரம் -செங்கல்பட்டு இடையே உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும், திருச்சி மற்றும் கோவை நகர்களில் அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்க வேண்டும், நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைப் பகுதிக்குள் வரும் அனைத்து சுங்கச்சாவடிகளையும் மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தி எடுத்துரைத்தார் அமைச்சர் எ.வ.வேலு.

அமைச்சர் உறுதி
தமிழக அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளுக்கு அளிக்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டறிந்தார். அதற்கு விலாவாரியாக பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள அனுமதி விவரங்களை பட்டியலிட்டார். இந்தச் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

எ.வ.வேலு பேட்டி
தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் நெரிசல் இல்லாத பயணத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான் பல புதிய திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். உயர்மட்ட சாலைகள் அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் பயண நேரமும் குறையக்கூடும் என்பதால் இது தொடர்பாகவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.












Click it and Unblock the Notifications