ஆவடியில் ஆசை ஆசையாய் கட்டிய புதிய வீடு.. கிடைக்காத இபி கனெக்சன்.. விசாரித்தால் ட்விஸ்ட்
சென்னை: சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பொன்னம்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் ராகவன் என்பவர் புதிதாக 2 அடுக்குமாடி கொண்ட வீட்டை கட்டியிருக்கிறார். அதில் இரண்டு கடைகளும் கட்டியிருக்கிறார். அதில் 4 மின் இணைப்புகள் வேண்டி விண்ணப்பித்துள்ளார். அவரது வீட்டிற்கு மின் இணைப்பு பெற மின் வாரிய அதிகாரி 15000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. அவரை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மின் வாரியத்தில் புதிதாக மின் இணைப்பு பெற யாராவது லஞ்சம் கேட்டால் உடனே புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். ஆனால் மக்கள் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் சென்று புகார் அளிக்க வேண்டும். நமக்கு ஏன் இந்த வம்பு என்று பலர் ஒதுங்கி செல்வதும், பிரச்சனை வேண்டாம் கேட்கும் பணத்தை கொடுப்போம் என்று நினைப்பதும் அதிகமாக இருக்கிறது.

அதேபோல் 4 நாளில் முடிய வேண்டிய வேலையை ஒரே நாளில் முடிக்க சிலர் லஞ்சம் தருவதும் தொடர்கிறது. இதுவே லஞ்சம் குறையாமல் இருக்க காரணமாக இருக்கிறது. அதேநேரம் ஒரு சிலர் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு எதிராக தைரியமாக புகார் அளிக்கிறார்கள். அப்படியான புகாரில் ஒரு மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவடியை அடுத்த கோவில்பதாகை பொன்னம்பிள்ளை நகரைச் சேர்ந்த 50 வயதாகும் ராகவன் என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக 2 அடுக்குமாடி கொண்ட வீட்டை கட்டியிருக்கிறார். அதேநேரம் ராகவன் தனது வீட்டின் கீழ் தளத்தில் 2 கடைகளும் கட்டியிருக்கிறார்.
ராகவன் புதிதாக கட்டியுள்ள கடை மற்றும் வீடு ஆகிய இரண்டுக்கும் சேர்த்து 4 மின் இணைப்புகள் வேண்டி ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்துள்ளார். அங்கு ராகவனின் வீட்டுக்கு மின் இணைப்பு தராமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதனிடையே ராகவன், மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அங்கு பணியில் இருந்த வருவாய் மேற்பார்வையாளரான சென்னை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரில் வசிக்கும் பாலசுப்பிரமணி (47) என்பவரிடம் இது பற்றி கேள்வி எழுப்பி உள்ளார்.
அப்போது பாலசுப்பிரமணி, புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராகவன், இது குறித்து திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மின்வாரிய அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை ராகவனிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர்.
அதன்படி நேற்று மதியம் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற ராகவன், லஞ்ச பணத்தை பாலசுப்பிரமணியிடம் கொடுத்திருக்கிறார். அதனை அவர் கையில் வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா ஆகியோர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று பாலசுப்பிரமணியை கையுங் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications