விதிமுறைகளை மீறுகிறார் மோடி.. தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை... நாராயணசாமி ஆவேசம்
சென்னை: பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் விதிமுறைகளை மீறி பிரதமர் பல முறை பேசி உள்ளார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது மோடிக்கு ஆதரவாக செயல்படுவதை காட்டுகிறது என்று குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று கூறிய அவர், ராஜீவ்காந்தியை மோடி கொச்சைப்படுத்தி பேசியிருப்பது அவருடைய மலிவான அரசியலை காட்டுகிறது என்று விமர்சனம் செய்தார்.
மறைந்த தலைவர்களை விமர்சிப்பது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தரம் தாழ்ந்து பேசிய மோடி, நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த நாராயணசாமி, டெல்லியில் முதலமைச்சருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக கூறினார்.
முன்னதாக, காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரி மாநில அரசு மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தடையாக இருந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இல்லையேல் மக்களே அனுப்பிவிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications