உள்ளாட்சி தேர்தல் பிரசாரம்.. கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு போட்ட தேர்தல் ஆணையம்!
சென்னை: உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி முடிந்து விட்டது. தற்போது அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த் நிலையில் பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகள்
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவும், தேர்தல் நடத்தை விதிகளின்படி தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கிகள் போன்றவற்றில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும், முறைப்படுத்தவும் பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

அனுமதி பெற வேண்டும்.
தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடைபெறும் நாள் வரை, தேர்தல் பிரச்சாரங்களுக்காக எந்தவொரு வகை வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகளை காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.எந்தவொரு பொதுக் கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலங்களுக்கு ஒலி பெருக்கிகளை பயன்படுத்த வேண்டுமெனில் காவல்துறையிடம் எழுத்து மூலமாக முன் அனுமதி பெற வேண்டும்.

நடவடிக்கை
ஒலி பெருக்கிகளை பொது அமைதிக்கு இடையூறு ஏற்படாதவாறு அனுமதிக்கப்பட்ட காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேற்கண்ட விதிகளை மீறினால் அனைத்து கருவிகளும் பறிமுதல் செய்யப்படும். மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுவரொட்டிகள்
எந்தவொரு அரசு வளாகத்திலும் சுவர் எழுத்துக்கள், சுவரொட்டிகளை / தாள்களை ஒட்டுதல் அல்லது வேறு விதங்களில் உருக்குலைத்தல் அல்லது கட்-அவுட்கள், விளம்பரப் பலகைகள், பதாகைகள், கொடிகள் முதலியவற்றை வைத்தல்/ காட்சிப்படுத்துதல் ஆகியவை அனுமதிக்கப்படக் கூடாது. தமிழ்நாடு திறந்தவெளிகள் சட்டம் 1959ல் பார்வையில் படும் பொது இடங்கள் என்பது ஒரு பொது இடத்தில் இருக்கும் அல்லது கடந்து செல்லும் ஒரு நபரின் பார்வையில்படும் தனியார் இடம்/ கட்டிடம் அடங்கும்.

சுவரில் எழுதுதல்
இத்தகைய இடங்களில் உரிமையாளரின் அனுமதி இருந்தாலும், சுவரில் எழுதுவதோ, சுவரொட்டி போன்றவற்றை ஒட்டுவதோ கூடாது, ஓர் இடத்தின் உரிமையாளரின் சம்மதம் பெறப்பட்டுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில் எந்த சூழ்நிலைகளிலும் சுவரில் எழுதுவதோ அல்லது சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது. இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications